புதன், 17 ஜூன், 2015

பல்லி விழும் பலன்


 


பல்லி விழும் பலன்
பல்லி விழும் பலன்
தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்


வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

திங்கள், 1 ஜூன், 2015

தென்காசி ஆலயம்


!

சில வருடங்களுக்கு முன் குற்றாலத்திற்கு செல்லும்  வாய்ப்பு கிட்டியது. சுமார் 5 நாட்கள் தொடர்ச்சியாக தங்கினேன். நல்ல சீசன் நேரம். தென்றலும், சாரலும் மனதை மயக்கியது. அனுபவித்தவர்களுக்கு தெரியும்.. நிச்சயமாக தமிழ் நாட்டில் , இந்த அளவுக்கு மனதை மயக்கும் இடம் , என் அனுபவத்தில் வேறு எங்கும் இல்லை... கொட்டும் அருவி, மூலிகை மனத்துடன் தென்றல் காற்று, எவ்வளவு சாப்பிட்டாலும் , வழிய வழிய எண்ணெய் தேய்த்து .. குளித்து முடித்து விட்டு வந்தவுடனே திரும்பவும் , பசியை தூண்டும்..  உடலுக்கு முழுக்க புத்துணர்ச்சி.. அருகிலேயே குற்றாலீஸ்வரர் ஆலயம்... அதிகமாக கூட்டமும் இருப்பதில்லை ... சலிக்க சலிக்க தரிசனம் செய்யலாம்.

அங்கேயே இருந்த லோக்கல் நண்பர் ஒருவர் கூடவே இருந்ததால் , மலையின் இண்டு இடுக்கு எல்லாம் - ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்தோம்.

அப்படி இருந்த போது, அருகில் இருக்கும் தென்காசி சென்று வரலாமே  என்று , ஒருநாள் மாலை நேரம் கிளம்பினோம். உங்கள் அனைவருக்கும்  ஒரு வேண்டுகோள்.. உங்கள் வாழ்வில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் - ஒரு முறை , இந்த தென்காசி - விஸ்வநாதரை தரிசிக்க வாருங்கள்.. 

இறைவனே , கை கோர்த்து உங்களுடன் ஆலயம் வருவது போன்ற ஒரு உணர்ச்சி , நிச்சயம் உங்களுக்கு ஏற்படும். அந்த சிவனின் பூரண அருள் அலைகள் , அபரிமிதமாக வெளிப்படும் இடம் இது.  இங்கு வந்த பிறகு, ஒவ்வொருவரும், ஆண்டவனின் அருள் அலைகளை மனப்பூர்வமாக , சில முக்கியமான ஆலயங்களில் உணர முடியும்.

அதன் பிறகு, நீங்கள் ஆலயம் செல்லும்போது உங்களுக்கு ஏற்படும் கண்ணோட்டமே வித்தியாசமாக இருக்கும். அந்த ஆலயத்துடன் , ஏதோ ஜென்ம ஜென்ம தொடர்பு இருப்பதை போல உணர முடியும். நமது வாசக அன்பர்களில் , யாருக்காவது அந்த அனுபவம் ஏற்பட்டால் , உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..

அம்பிகையின் பெயர் - குழல்வாய்மொழி. பெயரைக் கேட்கும்போதே...  நீங்கள் clean bowled !!    அந்த ஆலயம் பற்றி , ஒரு கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில், பெரும் மகிழ்ச்சி..

ஸ்தல வரலாறு : 
குலசேகரபாண்டியனுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து வந்த பராக்கிரம பாண்டியன் வடநாட்டின் காசி விஸ்வநாதரின் மேல் அபார பக்தி பூண்டு மனதுக்குள் வழிபட்டு வந்தான். காசி நகரத்து விஸ்வநாதர் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டு அதே போல் இங்கும் ஒரு கோயில் கட்டி அதில் விஸ்வநாதரைப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணினான்.

அதே நினைப்போடு இருந்த மன்னன் கனவில் காசி விஸ்வநாதரே தோன்றி, அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த லிங்கம் அந்த ஊரின் செண்பக வனத்தில் இருப்பதாகவும். கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்பின் தொடர்ந்து செல்லுமாறும் பணித்தார். அவ்விதமே செய்த மன்னன் குலசேகரனால் வழிபட்டு வந்த லிங்கத்தைக் கண்டு பிடித்தான். அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயரிட்டு கோயிலையும் கட்டினான். வடக்கே இருக்கும் காசி விஸ்வநாதர் தெற்கேயும் வந்து அருளுவதால் இந்த ஊரின் பெயரே அதன் பின்னர் தென்காசி என அழைக்கப் பட்டது.


இவனுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவ ஈசனே சிவனடியார் உருவில் வந்து உதவியதாகவும், பின்னர் அந்த அடியார் இந்தக் கோயிலிலேயே தங்கியதாகவும் கூறுகின்றனர். அவருக்கெனத் தனிச் சந்நிதியும் உள்ளது. அந்தச் சந்நிதியில் விக்ரஹம் எதுவும் இல்லாமல் சதுர பீட உருவில் அமைக்கப் பட்டு, அங்கே அடியாரை வணங்கி வருகின்றனர்.

அம்பிகை குழல்வாய்மொழிநாயகி என்னும் உலகம்மை அருளாட்சி புரிகின்றாள். கோயில் பிராகாரத்தில் ஸ்ரீசக்ர அமைப்புடன் கூடிய பராசக்தி பீடம் உள்ளது. இதையும் தரணி பீடம் என்றே அழைக்கின்றனர். அம்பிகை பூமியில் தோன்றியதால் அவ்விதம் அழைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. 40 முக்கோணங்களுடன்கூடிய இந்தப் பீடத்திற்குப் பச்சைப் புடைவை சார்த்தி வழிபடுகின்றனர்.

ஸ்ரீசக்ர சந்நிதிக்கு எதிரேயே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இங்கே நவகிரஹங்களும் மண்டபத்தினுள் ஒவ்வொரு திக்கையும் பார்த்தவண்ணமும், மண்டபத்துக்கு வெளியே நேர் வரிசையாகவும் காணப்படுகின்றனர். இதன் தாத்பரியம் புரியவில்லை. ஒருவேளை இடைக்காட்டுச் சித்தர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று இங்கே நடந்திருக்கலாமோ? அவர் தாம் நேரே ஒன்றாக இருந்த நவகிரஹங்களையும் ஒவ்வொரு திசைக்குத் திருப்பினார் என்பார்கள். அதை நினைவு கூரும் விதத்தில் அமைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

தில்லையில் நடராஜருக்குக் கணக்குகளை ஒப்பிப்பது போன்றதொரு நிகழ்ச்சி இங்கேயும் நடை பெறுகிறது. இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஈசனே நேரே கண்காணிப்பதாக ஐதீகம். ஈசனுக்குத் தனி அரியாசனம் உண்டு. ஆவணிமாதம் முதல் தேதி அன்று சொக்கநாதர் என்ற பெயரோடே அரியாசனம் ஏறும் உற்சவர் முன்னே ஒரு வருஷத்துக் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படுகின்றன. கங்கை நீரால் விஸ்வநாதருக்கு நீராட்டு  செய்யவேண்டும் என விரும்பிய மன்னனின் விருப்பத்துக்காக ஈசனே இங்கே கிணறு வடிவில் கங்கையை வரவழைத்தார் என்கின்றனர்.

இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்த பராக்கிரம பாண்டியன் கோயில் சரிவர நிர்வகிக்கப் படவேண்டும் என்பதிலும், கோயிலின் பராமரிப்புப் பணிகள் செம்மையாக நடைபெறவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறான் என்பதை இங்கே உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலினுள் நுழையும் ராஜகோபுரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “ காலத்தால் இந்தக் கோயில் சிதைவடையுமானால், அதைச் சரி செய்பவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்.” என எழுதப் பட்டுள்ளது. இது தவிரவும், கோயிலுக்கு வரும் பக்தர்களை வணங்கும்விதமாய் மன்னன் கீழே விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பம் அம்மன் கோயிலின் நுழைவு வாயிலிலும் அமைத்திருக்கின்றனர்.

அப்படியும் காலப் போக்கில் இந்தக் கோயில் கோபுரம் இரண்டாய்ப் பிளந்து காட்சி அளித்ததாகவும், பின்னர் 1990 ஆம்  ஆண்டு வாக்கில் புதிய கோபுரம் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். இந்தக் கோபுர வாசல் காற்றின் விசேஷம் என்னவென்றால் கோபுரத்துக்குள் நுழையும்போதே காற்று நம்மை முன்னோக்கித் தள்ளி உள்ளே கொண்டு சேர்க்கும் வண்ணம் கட்டப் பட்டிருப்பது தான். நுழையும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று கோபுரத்தைக் கடந்ததும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதையும் உணரும் விதம் கட்டப் பட்டுள்ளது.

அருமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் பாலமுருகன் சந்நிதி ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே அமைந்துள்ளது. சோமாஸ்கந்த அமைப்புக் கோயிலாகச் சொல்லப் படுகிறது. தல விருக்ஷங்கள் இரண்டு உள்ளன. ஏற்கெனவே இருந்த செண்பகம் தவிர, பலா மரமும் இங்கே தலவிருக்ஷம் ஆகும்.

இங்கே ஊரைச் சுற்றி இருக்கும், பச்சை பசேல் வயல் வெளியை பார்த்தீர்களேயானால் , ஏதாவது நிலம், வயல் வாங்கி , இங்கேயே "செட்டில்" ஆகிவிடத் தோன்றும்.. இங்கே கிடைக்கிற சுத்தமான காற்றுக்கு , என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

சில வருடங்களுக்கு முன், இந்து - முஸ்லீம் இடையே , ஏதோ பிரச்னை என்று , கொஞ்சம் பதற்றம் நிலவியது.. அதை எல்லாம் விட்டு தள்ளுங்க.. கடவுளுக்கு முன்னாலே , ஜாதியாவது , மதமாவது... ?

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. சதுரகிரிக்கு, குற்றாலத்திற்கு வரும் அன்பர்கள், தவறாமல் ஒருமுறை வந்து பாருங்கள்... 

ஏழரை சனி என்ன செய்யும்


ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்து , முறுக்கிப் பிழிந்து,  காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.



விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஸவரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக் கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.


எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!
http://www.silkroads.com/paintings/saniBhagwan-detail.jpg
முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது.பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன  பெரும்பாலோர்கள் என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.


ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.


அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான்.  பல கஷ்டமான அனுபவங்களைக் கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
மேலே அனுப்பி வைத்து விடுவார்.


அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!


அஷ்டமச் சனி என்பது , எவர் ஒருவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி இருக்கிறாரோ , அதை வைத்துக் கூறுவது.  இப்போது கண்ணியில் சனி இருப்பதால் , கும்பத்திற்கு இப்போது அஷ்டமம் நடந்து கொண்டு இருக்கிறது.

பொதுவாக அஷ்டமம் என்பது , ஏழரை ஆண்டு அனுபவிக்கும் தொல்லைகளை அந்த இரண்டரை வருடத்திலே கொடுத்துவிடும்.

இதனால் சனி பகவானின் கொடுமையில் இருந்து நீங்கள் தப்பிக்க , முடிந்தவரை நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொண்டு , இறை வழிபாடு முறைப்படி செய்தலே. இல்லையென்றால் மிக சிரமமாகத்தான் உணர்வீர்கள்...

நமது இந்த இணையதளத்தின் நோக்கமே , கஷ்டங்கள் வராமல் உங்களை காப்பாற்றவும், வந்தாலும் உங்களுக்கு மன தைரியத்தையும், வழிமுறைகளையும் எடுத்துக் காட்டுவதுமே.  நாம் ஏற்கனவே சனீஸ்வரனின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க என்ன என்ன செய்யலாம் என்று கூறி இருந்தோம்.. இப்போது அவரது இன்னொரு மகிமை வாய்ந்த ஸ்தலம் பற்றி கீழே காண்போம். 


சனிப்பரிகாரஸ்தலங்களில் பழமையானது ஏரிக்குப்பம்

கோவில்களில் இருக்கும் தெய்வீகவிக்கிரகங்கள் அதன் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் செப்புயந்திரத்தகடுகளால்தான் தெய்வீகசக்தி பெறுகின்றன.இந்த தெய்வீகசக்திகொண்ட தகடுகள் பல லட்சம் தடவை மந்தர உரு ஏற்றப்பட்டு கோவில் மூலஸ்தானத்தில் பதிக்கப்படுகின்றன.இதன் மீது தான் தெய்வீகசிலைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன.

ஆனால்,கல்லில் யந்திரத்தகடு ஒன்றை சித்தர்கள் பொருத்தி சுயம்புசனீஸ்வரரை வழிபட்டஸ்தலமே ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரபகவான் திருக்கோவில்.ஏரிக்குப்பம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் அஞ்சலில் அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு ஆரணியிலிருந்து நடுக்குப்பம் வழியாக படவேடு கிராமத்திற்கு செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது.
வேலூர் திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் உள்ள சந்தவாசல் கிராமத்திலிருந்து ஆரணிக்கு வரும் வழியில் 3 கி.மீ.தூரத்தில் உள்ளது.இந்த கோவில் போகர் 3000 என்ற வைத்திய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுயம்புசனீஸ்வரனாகிய இவர் ஏராளமான அற்புதங்களை செய்து வருகிறார்.
ஏரிக்குப்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வலது கை மூட்டு விலகி சிரமப்பட்டு வந்தார்.இந்தக் கோவிலுக்கு வந்துவழிபட்டு வந்ததால்,குணமாகி பழையபடி கை செயல்படத்துடங்கியுள்ளது.

சந்தவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால் வீங்கி நடக்க முடியாமலும்,கால்களை மடக்க முடியாமலும் பாதிக்கப்பட்டு இருந்த போது, ஒரு உதவியாளருடன் சனிக்கிழமைதோறும் வந்து வழிபட்டுக்கொண்டே இருந்தார்.இன்று அவரது கால்கள் குணமடைந்து யாரது உதவியுமின்றி நடமாடத்தொடங்கிவிட்டார்.

திருமணமாகாத பெண்கள் 9 வாரம் (சனிக்கிழமை) இங்கே வந்து ஒவ்வொரு வாரமும் 9 விளக்குகள் ஏற்றி வழிபட்டுவந்துள்ளனர்.அவர்களுக்கு திருமணம் நடந்த து.

சரி! ஏரிக்குப்பம் சனிபகவானை எப்படி குளிர்விக்கலாம்?

சனிபகவானின் காயத்ரி மந்திரத்தை சனிக்கிழமை,சனிப்பிரதோஷம் நாட்கள்,சனிப்பெயர்ச்சிநாட்கள், 8,17,26 ஆம் தேதிகளில் இங்குவந்து பீடத்தில் அமர்ந்து 108 முறை ஜபிக்கலாம்.

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தக ப்ரசோதயாத்


நீலப்பட்டு வாங்கி சனிபகவானுக்கு சாற்றலாம்.

நீல உடைகள் அணிந்துவந்து சனிபகவானை வழிபடலாம்.

கறுப்பு எள் மற்றும் கருப்பட்டி அல்லது சர்க்கரை கலந்த பண்டங்களை இடித்து சனிபகவானுக்கு படைத்து பிறருக்கு பிரசாதமாக வழங்கலாம்.

சனிபகவான் முன்பாக நல்லெண்ணெய்,நெய்,இலுப்பை எண்ணெய் கலந்து சிட்டி விளக்கில் திரி வைத்து விளக்கேற்றி 9 முறை வலம்வந்து வணங்கலாம்.

கோயிலுக்கு அருகில் உள்ள காக தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வழிபடலாம்.

கோயில் தொடர்பு முகவரி:
சுவாமி ஆர்.சீனிவாசன்
செயலாளர்,ஸ்ரீசனீஸ்வர பகவான் திருக்கோவில்,
ஏரிக்குப்பம்-606903.களம்பூர் அஞ்சல்,போளூர் வட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:04173-229273.93602 23428

முத்திரைகள்


பலன் தரும் பத்து முத்திரைகள்


"முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.



1. அறிவு முத்திரை:


ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.


2. பூமி முத்திரை:


மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.


3. நீர் முத்திரை:


சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.




4. வாயு முத்திரை:


ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.



5. சூன்ய முத்திரை:


நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.



6. சூரிய முத்திரை:


மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.



7. வாழ்வு முத்திரை:


சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.


8. ஜீரண முத்திரை:


நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.





9. இதய முத்திரை:


நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.


10. லிங்க சக்தி முத்திரை:


இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!