புதன், 18 பிப்ரவரி, 2015

பாபக் கிரகங்களின் சூட்சும வலு...


!

இயற்கைப் பாபக்கிரகங்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படும் சனியும், செவ்வாயும் எந்த ஒரு ஜாதகத்திலும் நேரிடையாக உச்சம் ஆட்சி போன்ற நிலைகளில் வலுவடைவது அவர்களது தசையில் அதிர்ஷ்டத்தைத் தருவது இல்லை.

வேதஜோதிடம் சொல்லும் கிரகங்களின் ஆறுவிதமான பலங்களில் முதன்மை பலமான ஸ்தானபலத்தை பாபக்கிரகங்கள் கேந்திர கோணங்களில் அடையவே கூடாது.

அதாவது பாபக்கிரகங்களான சனியும் செவ்வாயும் ஒருவரின் ஜாதகத்தில் நேரிடையாக வலுப்பெறக் கூடாது.

லக்னாதிபதியாகவே இந்த இரு கிரகங்கள் அமைந்தாலும் அவை ஆட்சி உச்சம் என ஸ்தானபலம் பெற்று நேரிடையாக வலுப்பெறுவது நன்மைகளைத் தராது.
அதைவிட சனியும், செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் ஸ்தானபலம் இழந்து (ஆட்சி உச்சம் பெறாமல்) திக்பலமோ, சுபர்களின் பார்வை மற்றும்  சேர்க்கை பலமோ,  மறைவிடங்களில் ஸ்தானபலமோ பெறுவது மிகச்சிறந்த யோகத்தையும், ஜாதகருக்கு நல்ல குணங்களையும் தரும்.

ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலான  எனது ஜோதிட ஆய்வில் நான் கண்டுணர்ந்த இதையே “பாபக் கிரகங்களின் சூட்சும வலுத் தியரி ” என நான் குறிப்பிடுகிறேன்.

பொதுவாக சனியும், செவ்வாயும் குணக்கேடுகளுக்கு காரணமானவர்கள். தனித்து வலிமை பெற்ற செவ்வாயால் ஒரு முரட்டுத்தனமான முன்கோபக்காரனையும், சனியால் முட்டாள்தனமான பிடிவாதக்காரனையும் மட்டுமே உருவாக்க முடியும்.

கிரகங்கள் பாபக்கிரகங்கள், சுபக்கிரகங்கள் என்று நமது ஞானிகளால் ஏன் பிரிக்கப்பட்டன?
மனித வாழ்விற்குத் தேவையான, மனிதனை நல்லவழியில் செல்ல வைக்கக் கூடிய செயல்பாடுகளைத் (காரகத்துவங்கள்) தரும் கிரங்கள் சுபக்கிரகங்கள் எனவும்,

தேவையற்ற குணங்களையும், பிறருக்கு துன்பம் தரும் செயல்களையும், அடுத்தவரோடு ஒத்துப்போகாத, தீயவழிகளைத் தரும் கிரகங்கள் பாபக் கிரகங்கள் என்றும் வகுக்கப் பட்டன.

இதில் சுபக்கிரகமானாலும், பாபக்கிரகமானாலும் முக்கிய பலமான ஸ்தானபலத்தை (ஆட்சி, உச்சம்) அடைந்தால் தங்களின் காரகத்துவங்களை (செயல்பாடுகளை) ஜாதகருக்கு முழுமையாகச் செய்வார்கள்.

இதற்கு நேரிடையான அர்த்தம் என்னவெனில்.....

குருபகவான் லக்னாதிபதியாகி ஸ்தானபலம் பெற்றால், அல்லது லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகர் கருணை, பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற குணங்களோடும், புதன் வலுப்பெறின் மிகச் சிறந்த அறிவாளியாகவும், நிபுணத்துவம் உடையவராகவும், செவ்வாய் வலுப்பெற்றால், கோபக்காரனாகவும், அசட்டுத்துணிச்சல் கொண்டவனாகவும், சனியானால் பிடிவாதக்காரனாகவும் தன்னைத்தானே புத்திசாலி என நினைத்துக் கொள்ளும் முட்டாளாகவும், குறுக்குவழி எண்ணங்கள் கொண்டவராகவும் இருப்பார்.

நமது கிரந்தங்கள் அனைத்து மூல விஷயங்களையும் மறைபொருளாகவே சொல்லக் கூடியவை. ஞானிகள் நமக்கு எந்த ஒரு முக்கிய சூட்சுமத்தையும் நேரிடையாகச் சொல்வது இல்லை. சொல்லவும் மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் அந்த ரகசியங்களை நேரிடையாகவே நமக்குப் போதித்தாலும் அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் தகுதியும் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான்.

எனவேதான் நமது மூலநூல்களில் காணப்படும் உயர்ந்த கருத்துக்களுக்கும், வார்த்தைகளுக்கும் பின்னால் சொல்லப்படாத உன்னதங்கள் மறைந்திருக்கின்றன. 

அவற்றைப் புரிந்து கொள்ளத் தகுதிநிலை வரும்போது மட்டுமே புரிந்து கொள்ளும்படி ஜோதிட சூட்சுமங்களை ஞானிகள் அமைத்திருக்கிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதி வருகிறேன்.

அனைத்து சூட்சுமங்களும் நமது ஜோதிட சாஸ்திரத்தில் மறைபொருளாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.

இயற்கைச் சுபக்கிரகங்கள் ஒருவரது ஜாதகத்தில் வலுப்பெற வேண்டும் என்று சொல்லப்படும்போது, இயற்கைப் பாபக் கிரகங்கள் வலுவடையக் கூடாது என்ற தத்துவம் அங்கே மறைந்திருக்கிறது.

இயற்கைச் சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாக அமையக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கைப் பாபக்கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாக வரக்கூடாது என்ற எதிர்பொருள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. இதுவே பாதகாதிபதிகள் பற்றிய சூட்சுமம், பாதகாதிபதிகளின் தத்துவம் என்பதையும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

இந்த ஆண்டு கோட்சார ரீதியாக சனிபகவான் துலாம் ராசியில் உச்சம் அடைந்திருக்கிறார். இதைப் பற்றி குறிப்பிடும் போது ஒரு சிலர் சனிபகவான் உச்சம் பெறுவது மிகச்சிறந்த யோகம் என்று எழுதுகிறார்கள்.

ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதகங்களை அலசிய என்னுடைய நீண்ட ஜோதிட ஆய்வில் சனி, செவ்வாய் உச்சம் பெற்ற எந்த ஒரு ஜாதகருமே அவர்களுடைய தசையில் மேன்மையான பலன்களை அடைந்தது இல்லை.

சனி உச்சபங்கம் அடைந்திருந்தாலோ, அல்லது குருவின் பார்வையையோ, சுபர்களின் தொடர்பையோ பெற்றிருந்தாலோ அல்லது வேறுவழிகளில் சூட்சும வலு அடைந்திருந்தால் மட்டுமே சுக வாழ்வை அளிப்பார். செவ்வாயும் அப்படித்தான்.

மற்ற சுபக்கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் வல்லமை பாபக்கிரகங்களான சனிக்கும், செவ்வாய்க்கும் கிடையாது.

துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் தனித்து உச்சம் பெற்று சுபர் பார்வையோ,தொடர்பையோ பெறாத சனி, சாதாரண அடிமை வாழ்வையே அளிப்பார். உச்சம் பெற்ற சனிதசையில் ஏதாவது ஒரு ஆலையில் ஐந்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு இரும்பு ஸ்பானரை கொண்டு கனரக இயந்திரங்களை முடுக்கிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஜாதகர்களை நான் பார்த்திருக்கிறேன்.

லக்னத்தோடு சம்பந்தப்பட்டு வலிமை பெறும் சனி, உயரம் குறைந்த தன்மையையும், பிடிவாத குணத்தையும், சுற்றி உள்ளவர்களோடு ஒத்துப் போகாமல் குதர்க்கவாதம் பேசுபவர்களையும், ஒன்றுமில்லாத தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவர்களையும், அதிர்ஷ்டக் குறைவானவர்களையுமே உருவாக்குவார்.

அதேபோல செவ்வாய் உச்ச பலமோ, ஆட்சி பலமோ பெற்று லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த நபர் வீரம் என்ற பெயரில் குற்றச்செயல்களை செய்பவராக இருப்பார். ஆயுதங்களை கையாள்வதில் விருப்பம் உள்ளவராகவும், முன்யோசனையில்லாமல் அசட்டுத் துணிச்சலுடன் கூடிய செயல்களைச் செய்பவராகவும், கடுமையான கோபக்காரனாகவும், முரடனாகவும் இருப்பார்.

உச்சபங்கம், மறைவு பெறுதல், அல்லது சுபர் பார்வை ஆகியவை மட்டுமே இந்த குணங்களை மாற்றும்.

உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களுமே நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் கிரகங்களை சுபர், அசுபர்கள் எனப் பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே...!

தென்மாவட்டங்களைப் பற்றிய ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் கதாநாயகன் சரத்குமாரிடம் ஒரு வசனம் பேசுவார் “ நீ வெட்டுறதுக்கு முன்னால யோசிப்ப... நான் வெட்டுனதுக்கு அப்புறம்தான் யோசிப்பேன்” என்று.....

இந்த வில்லன்தான் நிஜமான செவ்வாய்...!

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று நேர்வலிமை பெறுகிறது என்றால் அதன் செயல்பாடுகள் அதாவது  அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் வலிமை பெறுகின்றன என்று அர்த்தம்...

அந்த நிலையில் எந்த வித சுபகாரகத்துவங்களும் இல்லாமல் வெறுமனே வறுமை, பிணி, தரித்திரம், கடன், அடிமைவேலை, உடல் ஊனம் ஆகியவற்றை மட்டுமே தன் குணங்களாகக் கொண்ட சனிபகவான் வலுப்பெற்றால் உங்களுக்கு எதைத் தருவார்? அதைப்போலத்தானே செவ்வாயும்?

(சனியிடம் ஆயுள் பலம் இருக்கிறதே என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். அதுவும் தவறுதான். அதைப் பற்றிய விளக்கத்தை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். இங்கே அதை ஆரம்பித்தால் இந்தக் கட்டுரை இன்னும் நீளமாகும்.)

செவ்வாய் தனித்து வலிமை பெறும் நிலையில் அவரின் செயல்பாடுகளான முரட்டுத்தனம், ஆயுதங்களை கையாளுவதில் விருப்பம், வன்முறையில் நாட்டம், அடிமனதில் ரத்தம் பார்க்கும் ஆசை, அசட்டுத்துணிச்சல், இரக்கமற்ற அதிகாரம், கடினமனம், விவேகமற்ற வீரம், முன்யோசனையின்றி எதையாவது செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளுதல் போன்றவைகளே ஜாதகரிடம் இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு பத்தாமிடமான மகரத்தில் உச்சபலமும், திக்பலமும் அடைந்து எவ்வித சுபர்பார்வையும் சேர்க்கையும், இல்லாமல் தனித்திருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் கொடூரமனம் உள்ளவராக இருப்பார். கண்டிப்பு எனும் பெயரில் மூர்க்கத்தனம் இருக்கும். கருணையும், மனிதநேயக் குணங்களும் துளியும் இருக்க வாய்ப்பின்றி மகா கோபக்காரராக ஜாதகர் இருப்பார்.

செவ்வாய் வக்ரமடைந்து, வேறு வகையில் பலவீனம் அடைந்திருந்தால் மட்டுமே இந்த பலன்கள் மாறும்.

நமது ஜோதிட மூலநூல்கள் செவ்வாய் வலுப்பெற்றவனை சேனாதிபதி, மகாவீரன், யுத்தத்தில் எதிரிகளின் தலைகளை பந்தாடுபவன், கரடு முரடானவன், அதிகாரம் செய்பவன் என்றுதான் சொல்கின்றனவே தவிர, இவன் நல்லவன், இளகிய மனம் உடையவன், வசதி படைத்தவன், சொகுசு வாழ்க்கை வாழ்பவன், அன்பே வடிவானவன் என்று சொல்லவே இல்லையே...!

சனி ஸ்தானபலம் மட்டுமே பெற்று தனித்து உச்சம், ஆட்சியாக இருக்கும் நிலையில் மிகக் கொடுமையான பலன்களைச் செய்வார். அவரின் காரகத்துவங்களான வறுமை, தரித்திரம், நோய், அடிமை நிலை, கடன், உடல் ஊனம், அழுக்கான இடங்களில் வேலை, கருப்பு, இளமையில் முதுமை போன்ற பலன்களை ஜாதகருக்கு மிக வலுவாகத் தருவார்.

உச்சநிலையில் வக்ரம் பெறுவது, சுபர் சேர்க்கை, பார்வை போன்றவை மட்டுமே சனியின் மேற்கண்ட பலன்களை மாற்றும்.

உச்சத்தில் வக்ரம் என்பது நீச நிலையைக் குறிக்கும் என்பதால் சனியின் கொடிய பலன்கள் எதுவுமே இல்லாமல் அதற்கு நேர்மாறான நல்ல பலன்கள் இருக்கும்.

மேஷத்தில் நீசம் பெறும் சனி சுபர் சம்பந்தம் பெற்றால் மிகச் சிறந்த சொகுசு வாழ்க்கையை அளிப்பார். எவ்வித சுப சம்பந்தமின்றி தனித்து நீசம் பெற்றால் கூட தனது கொடிய காரகத்துவங்களை தரும் சக்தியின்றி அதற்கு நேர்மாறான கடனற்ற, வறுமையற்ற, நோயில்லாத வாழ்க்கையை சனி அளிப்பார்.

சரி..

சனியும் செவ்வாயும் ஆட்சி உச்சம் பெறுவது எதற்காக? அவர்கள் ஸ்தான பலம் மட்டும் பெற்றால் நல்ல பலன்களே இல்லையா என்று நீங்கள் கேட்பீர்களேயானால், ஜாதகத்தில் அவர்களுடைய ஆதிபத்திய இடங்கள் நிச்சயம் வலிமை பெறும்.

அவர்களுடைய தசையில் அவர்களுடைய கொடிய காரகத்துவங்கள் நடைபெறும் என்றாலும், ஜாதகரின் எந்த ஆதிபத்தியங்களுக்கு அவர்கள் உரியவர்களோ அந்த இடங்கள் மேம்படும்.

உதாரணமாக மேஷ லக்னத்திற்கு பத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் தசையில் நல்ல பலன்கள் கிடைக்காவிட்டாலும், அவர் லக்ன அஷ்டமாதிபதி என்பதால் உறுதியான உடலும்,  நீடித்த ஆயுளும் இருக்கும். தனித்த செவ்வாய் தசையில் அதிர்ஷ்டங்கள் எதுவும் நடக்காது. ஜாதகர் உடற்பயிற்சியில் விருப்பமாகி உடலைப் பேணுவதும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுபவராகவும் இருப்பார்.

அதுபோலவே துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் உச்சம் பெற்ற சனி தசையில் ஜாதகர் அதிர்ஷ்டங்களை அடைய மாட்டார். சனி 4, 5 ஆம் இடங்களுக்கு உரியவர் என்பதால் ஜாதகரின் சனி தசையில் அவரின் மக்கள் நன்றாக இருப்பார்கள். புத்திரர்கள் மூலமும், கல்வி, தாயார் வழியிலும் ஜாதகருக்கு நல்ல பலன்கள் இருக்கும். அவ்வளவே...!

இன்னுமொரு முக்கிய சூட்சுமமாக ஒரு ஜாதகத்தில் பாபக்கிரகங்கள் பலம் பெறுவது அந்த ஜாதகருக்கு எவ்வாறு நன்மை செய்யும் என்றால், நமது ஜோதிட விதிகளின்படி ஒரு தசை நன்மையான பலன்களைத் தர வேண்டும் எனில் அந்த தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை அடைய வேண்டும் என்பது முக்கியமானது. 

அதன்படி சனி, செவ்வாயின் ராசிகளான மேஷம், விருச்சிகம், மகர, கும்பங்களில் அமர்ந்து தசை நடத்தும் ஒரு கிரகம் பூரணபலன் தர வேண்டும் என்றால் அந்தக் கிரகத்திற்கு வீடு கொடுத்த சனியும், செவ்வாயும் வலுப் பெற வேண்டும்.

உதாரணமாக  ராகு சில நேரங்களில் சர ராசிகளில் (மேஷம், மகரம்) மூன்று, பதினொன்றாமிடங்களில் இருக்கும் போது, ராகுதசை மறைமுகமான வழிகளில் மிகப் பெரிய பணவரவை அளிப்பதற்காக ராகு இருக்கும் வீட்டின் அதிபதிகள் வலுப்பெற வேண்டும் என்ற நிலையில் சனியும், செவ்வாயும், உச்ச வலுப்பெற்றே ஆக வேண்டும்.

அந்த நிலையில் கூட எனது தியரிப்படி அந்த ஜாதகத்தில் அவர்கள் எட்டு, பனிரெண்டாமிடங்களில் மறைந்துதான் உச்சம் பெறுவார்கள். அப்போதுதான் ராகுதசை முழுக்க மறைமுக நன்மை செய்யும்.

இந்த அமைப்பை நான் அரசியல்வாதிகள் அல்லது அவர்களை அண்டிப் பிழைப்போரின் ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன்.

அதாவது விருச்சிக லக்னத்திற்கு மூன்றாமிடமான மகரத்தில் (சர ராசி) ராகு அமர்ந்து ராகுவுக்கு வீடு கொடுத்த ராசிநாதன் சனி அவருக்கு கேந்திர ஸ்தானத்தில், அதாவது இன்னொரு சர ராசியான துலாத்தில் லக்னத்திற்கு பனிரெண்டில் மறைந்து உச்சம் பெற்றும்,

மிதுன லக்னத்திற்கு பதினொன்றான சரராசி மேஷத்தில் ராகு இருந்து, அவருக்கு இடமளித்த செவ்வாய், அவருக்கு கேந்திரமான மகரத்தில் எட்டில் மறைந்து உச்சம் பெறும் நிலையில் ராகுதசை மறைமுகமான மகா தனயோகத்தை அளிக்கும்.

இந்நிலையில் ராகு விருச்சிகத்திற்கு பாக்கியாதிபதியான சந்திரனின் சாரமும், மிதுன லக்னத்திற்கு ஐந்துக்குடைய சுக்கிரனின் சாரமும் பெற்றிருப்பார். ராகு யோகம் தரும் இடங்களாக நம் மூலநூல்களில்  சொல்லப்படும் ஆமேடம், எருது, சுறா, நண்டு, கன்னியும், 3, 11 ம் ஸ்தானங்களும் இதில் அடங்கும்.  

சனி, செவ்வாயின் உச்ச நிலைகள் இது போன்ற நிலைகளுக்குத்தான் பயன்படுமே தவிர அவர்கள் நேரிடையாக அதிர்ஷ்டம் தருவதற்கு அல்ல.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக