ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.





மக்கள் வகை ஏழு என்று
 
சொல்லும் புறத்திணை இயல் 74 ஆவது சூத்திரத்தில்
 
பல விவரங்கள் புதைந்துள்ளன. (பகுதி 61).
 
அந்தச் சூத்திரத்தைப் படித்து விட்டு

பார்ப்பனன் முதலான நான்கு வர்ணங்கள் மட்டுமே இருந்தனர்
 
என்று திராவிட போதை கொண்டவர்கள் நினைக்கின்றனர்

அதே சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள
 
அறிவன்தாபதர்பொருநர்
 
என்னும் வகைகளையும் சேர்த்தே
 
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்

என்று தொல்காப்பியம் சொல்வதை
ஏனோ அவர்கள் பார்க்க விரும்பவில்லை.
அவர்கள் பார்த்தார்கள் என்றால்
இந்த வகைகள் எந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன
என்ற விவரம் புலனாகி இருக்கும்.
உயர்வுதாழ்வு என்ற அடிப்படையிலோ,
பிறப்பு அடிப்படையிலோ
நம் முன்னோர்கள் இந்த வகைகளை உண்டாக்கவில்லை.
இதை அறிவன்தாபதர் என்ற இரண்டின் மூலமாகவே
நாம் தெரிந்து கொள்ளலாம்.


அறிவன் என்பவன் காலக் கணிதன்.
இன்றைய வழக்கில் சொல்வதென்றால்
அவனுக்கு ஜோதிடன் என்று பெயர்.
தாபதர் என்பவர் தவமுனி.
குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு,
ஜடாமுடியுடன்தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்.
இந்த இரண்டு வகைகளும்
ஜாதியின்பாற்பட்டோஅல்லது
ஒரு திணிப்பாகவோ ஏற்படுவதில்லை.
அவரவர் இயல்பின் படி,
சில ஆர்வங்கள் உண்டாகின்றன.
அதனால் சில திறமைகள் உருப்பெறுகின்றன.
அந்தத் திறமையின் அடிப்படையில்
அவர் செய்யும் தொழில் அல்லது செயல் அமையப் பெறுகிறது.
இந்த உருவாக்கத்தை நாம் ஜோதிடருக்கும் சொல்வோம்.
தவ முனிக்கும் சொல்வோம்.


இதே அடிப்படைதான் வர்ணங்களுக்கும்
என்று நாம் முன்பே பார்த்தோம் (பகுதி 52).
சிலவிதமான இயல்புகளின் காரணமாக
சிலவிதமான திறமைகள் இயல்பாகவே அமையப் பெறுகின்றன.
அவற்றின் அடிப்படையில் தொழில் செய்வதுதான் விவேகம்.
நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும்,
இயல்பு அல்லது சுபாவத்தின் அடிப்படையில்
அவர் ஜோதிடர் ஆகலாம்.
தவமுனியாகலாம்.
இயல்பு அல்லது சுபாவத்தால் ஏற்படும் திறமையின் காரணமாக
ஓரிடத்தில் முக்கியத்துவம் கிடைக்கலாம்.
இன்னொரு இடத்தில் முக்கியத்துவம் கிடைக்காமல் போகலாம்.


உதாரணமாக பார்ப்பான் பாங்கன்” என்னும்
தொல்காப்பிப் பொருளதிகாரச் சூத்திரம், 490,
பார்ப்பனனுக்கு முதலிடம் கொடுக்கிறது.
எங்கே?
தலைவன் காதல் வயப்பட்டு,
களவியலில் ஈடுபடும் பொழுது,
அவன் தான் செய்வது சரியா தவறா என்று
கேட்க வேண்டுமென்றால் அதற்கு முதல் ஆளாகப்
பார்ப்பனனைத்தான் கேட்பான்.
அவனுக்குப் பிறகுதான் பாங்கன் (தன்  நண்பன்) வருகிறான்.  


அது ஏன் என்று உரையாசிரியர் கூறுகிறார்.
பார்ப்பனன் என்பான் நன்றும்தீதும் ஆராய்ந்து
உறுதி கூறுவான் என்படும்.
பாங்கன் என்பான் அவ்வாறன்றித்
தலைமகன் வழி நின்றொழுகி வருமாகலின்
அவனை அவன் பின் (பார்ப்பன்னுக்கு அடுத்துவைத்தார்.”

பார்ப்பானது கல்வி வேதக் கல்வியாகவும்,
தர்ம சாஸ்திரம் படிப்பதாகவும் இருப்பதால்
அவனுக்கு ஒரு செயலின்
தர்ம நியாயங்கள்,
அதனால் எற்படும் பாவ – புண்ணியங்கள் தெரியும்.
அதனால் களவியலில் ஈடுபடுவோருக்கு
நல்லது கெட்டது எடுத்துச் சொல்வான்.

பாங்கன் என்னும் நண்பனோ
நட்புக்காக,
தலைவன் மனம் எப்படியோ
அதற்கேற்றாற் போல் சொல்வான்.
அதை முழுவதும் நல்லது என்று எற்றுக் கொண்டுவிட முடியாது.
இதனால் களவு நட்பில் ஆலோசனை பெறவேண்டி
பார்ப்பனனை நாடினர்.
இதை வெளிப்படுத்தும் ஒரு பாடல் குறுந்தொகை 156 இல் வருகிறது.


ஆனால் கற்பியலில் ஏற்படும் சந்தேகங்களத் தீர்க்க,
பார்ப்பனனுக்கு முதலிடம் தரவில்லை.
அங்கு பாணனுக்குத்தான் முதலிடம்!
இதை அடுத்த சூத்திரத்திலேயே சொல்கிறார்.
பாணன்கூத்தன்விறலிபரத்தைஅறிவர்கண்டோர்
என்னும் மக்களிடம்
கற்பியலுக்கு ஆலோசனை பெற்று வந்தனர்
என்கிறார் தொல்காப்பியர்.
கற்பியல் என்றால்
இன்றைய பாஷையில் அரேஞ்டு மாரேஜ்”.
இரண்டு பக்கத்திலும் தாய்தந்தையர் சம்மதத்துடன்,
ஊரறிய சடங்குகள் செய்து திருமணம் செய்வித்தல் எனப்படும்.
இந்த வகையில் திருமணம் செய்யப்போகும் பெண்,
மற்றும் ஆணினது குணம்இயல்பு இவையெல்லாம்
தெரிந்துக் கொள்ள
பாணனிடம் முதலில் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.

பாணன்பறையன்துடியன்கடம்பன் என்னும்
தொல்குடி மக்கள் நான்கு என்று
சங்க நூலில் சொல்லப்பட்ட (பகுதி 68) பாணன்,
கற்பியலுக்கு முதல் ஆலோசகன் ஆவான்.

அங்கு பார்ப்பனனுக்கு முதலிடம் இல்லை.
இன்றைக்குக் கீழோர் என்று ஆக்கப்பட்ட பாணன் வகையினர்,
ஒரு பெண் அல்லது ஆணின் கற்பு நிலையை
மிகச் சரியாகக் கணித்துக் கூறக்கூடியவர்
என்ற நிலையில் அன்று இருந்தனர்.
பாணனுக்கு மனித சுபாவம் நன்றாகத் தெரியும்.
நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பவர்கள் அவர்கள்.
அவர்கள் எல்லாவிதமாக மக்களையும் கண்டிருப்பர்.
அதனால் அவர்கள் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலோ
அல்லது தாங்கள் அவர்களை
ஏற்கெனெவே பார்த்திருக்கக்கூடிய சாத்தியத்தாலோ
அவர்களது கற்பியல்புகளைப் பற்றி விவரங்களைக் கொடுப்பர்.

அதுமட்டுமல்ல பாணனுக்குச் சொல் வன்மை உண்டு.
அதனால்தான் அவனால் பாடிப் பரிசில் பெற முடிந்தது.
அந்தச் சொல்வன்மையை,
களவியலில் ஈடுபட்ட ஆண்கள்
பயன் படுத்திக் கொண்டனர்.
தலைவிக்குத் தூது விடவும்,
தலைவியை சமாதானப் படுத்தவும்
பாணனையே அழைத்தனர்.
அவனது சொல் வன்மையில் மயங்கி
அவனுக்கு விருந்து கொடுக்கிறேன்
என்று தலைவி சொல்லும் சங்கப் பாடலும் உண்டு.


அதே நேரம்தம்பதிகளான கணவன் மனைவிக்கு
இடையே இருக்கும் ஊடலையும் புரிந்துக் கொண்டு,
எப்படிப்பட்ட கற்புடையவளாகத் தலைவி இருக்கிறாள்
என்று பாணன் கண்டு கொள்ளும் சங்கப் பாடல்களும் உள்ளன.
இதனால் அக வாழ்க்கையில்
ஒருவர் குணத்தை,
இயல்பை,
கற்புடைமையைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டவன்
பாணனைப் போல வேறு ஒருவரில்லை என்பதால்,
கற்பியல் கேள்விகளுக்கு அவனுக்கே முதலிடம்.


இப்படி இயல்பு பார்த்துதான் செயல்பாடு கண்டிருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் வகைப் படுத்தியிருக்கிறார்கள்.
ஆரியத் திணிப்பாகப் பார்ப்பனன் திணித்த கலாசாரமாக இருந்திருந்தால், 
களவியலுக்குத் தன் பெயரையும்,
கற்பியலுக்குப் பாணன் பெயரையும்
முன்னிறுத்தி இருக்க மாட்டார்கள்.
மேலும் ஏழு வகை என்று
புறத்திணை இயல் சூத்திரம் சொல்வது போல
இவையெல்லாம் என்மனார் புலவர் சொன்னது.
அதாவது வழி வழியாக வந்தவை
இந்த வகை, வழக்கங்கள் என
புலவர்கள் சொல்வார்கள் என்கிறார் தொல்காப்பியர்.


கற்பியல் சூத்திரத்தில் அறிவனையும் சொல்லியிருப்பதைக் காணலாம்.
பெற்றோர் பார்த்துச் செய்யும் திருமணத்தில்
அறிவனுக்கு என்ன வேலை என்றால்,
மணப்பெண்மணமகன் ஆகியோரது
பிறந்த நாள், நக்ஷத்திரம், ஜாதகம் என்பவற்றின் அடிப்படையில்
அந்தத் திருமணம்,
கடவுள் சித்தத்தினால்
ஊழ்வலியால் ஏற்படுத்தப்பட்ட வாழ்கைதானா,
அது நன்றாக அமையுமா என்று கண்டு சொல்வதுதான்.

களவியலைப் பற்றிச் சொல்லும்போது,
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் எதிர்ப்பட்டு நோக்கி,
தங்கள் மனதைப் பறி கொடுத்து
ஒன்று சேர்வது ஊழ் வலியாலே என்று சொல்லப்படுகிறது.
வ்விதமாக ஒருவரை ஒருவர் சந்திக்காமல்,
மற்றவர்களால் அந்த மணம் ஏற்படுத்தப்படும் போது,
ஊழ் வலி இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல
அறிவன் தேவை.
இதனால் கற்பியலில்
திருமணத்தை உறுதிப் படுத்த
அறிவன் பெயர் வருகிறது.
இதன் மூலம்,
ஜோதிட ரீதியாக திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது
பழந்தமிழர் வாழ்வில் இருந்திருக்கிறது
என்று தெரிகிறது.


சீர்திருத்தத் திருமணங்கள்
திராவிட போதை உள்ளவர்களது வழக்கம்.
அறிவன் சொல்கேட்டு திருமணம் நிச்சயிப்பதும்,
அதையும் அவன் சொல்படி நாள் பார்த்துச் செய்வதும்
சங்ககாலத் தமிழர் வழக்கம்.

அந்த அறிவனை ஒரு தனி வகையாகச் சொல்லக் காரணம் என்ன?
அதற்கு அவர்களது இயல்புதான் காரணம்.
ஒவ்வொரு வர்ணமும் ஒவ்வொரு இயல்பின்படி
சொல்லப்பட்டுள்ளது என்பது போல,
சில குறிப்பிட்ட இயல்புகள் தூக்கலாக இருந்தால்
அவன் அறிவன் ஆகிறான்.
அந்த இயல்புகளை,
மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் என்கிறது தொல்காப்பியம். (தொ-காப்பு-இயல் 74) 

மூவகைக் காலங்களியும் ஆராய்பவன் அறிவன்.
அந்த மூவகைக் காலங்கள் பல வகைப்படும்.
அவை ஒவ்வொன்றையும் பார்ப்போம்.

(1)  இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பது ஒரு மூவகை.
இதையே கணியன் பூங்குன்றனாரது பாடலில் காண்கிறோம்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று துவங்கும் பாடல்
கணியன் என்னும் அறிவர்,
அதாவது ஜோதிடரால்
எழுதப்பட்டது.

 யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும் 
இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு
இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பர். 
ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம்பொருள் வேறு. 
இவை கர்ம வினையின் பாற்பட்டு
ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழ்கை நிலையைப் 
புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு. 
கடந்த காலத்தால் நிகழ் காலம் உண்டாகிறது.
கடந்த காலத்தில் செய்யப்பட்ட வினைகள், 
ஊழ் வினை என்று தொடர்ந்து வந்து,
நிகழ் காலத்தில் நன்மையையும், தீமையையும் உண்டாக்குகிறது.
ஊழ்வினையைக் கொண்டே ஒருவருக்கு அமையப் போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி சொல்லி விடலாம்.
இதையே திருப்பிப் போட்டால்,
நிகழ்காலத்தில் நடக்கும் அனுபவங்களைக் கொண்டு, 
அதற்குக் காரணமான கடந்த கால ஊழ்வினை என்ன என்று சொல்லி விடலாம்.
அந்த ஆராய்ச்சிகள் செய்தவர்கள்தான் அறிவர்கள். 


அதை அறிந்த பூங்குன்றனார் தன் பாடலில்
முழுக்க முழுக்க ஊழ்வினைக் கருத்தையே எழுதியுள்ளார்.

தீதும்நன்மையும்சாதலும்நோதலும் பிறர் தர வருவதில்லை
அவை கர்ம வினையின் படியே ஏற்படுகின்றன. 
ஒருவர் பெரியோராக இருத்தலும்
அல்லது சிறியோராக இருத்தலும்
முன் பிறவியில் செய்த வினையின் படியே அவ்வாறு இருக்கின்றனர்.
 எனவேபெரியோரைப் பார்த்து வியப்பதும் இல்லை
சிறியோரை இகழ்வதும் இல்லை. 
மற்றவர் யாரும்நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது
நாமே நம் நிலைக்கு காரணம் 
ஆகையால்எல்லாரும் நமக்கு ஒன்றுதான். 
அதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் 
கர்ம வினைத் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல். 
இந்தத் தத்துவத்தின் அடிப்படைஜோதிடம் தரும் முக்கால அறிவால் ஏற்படுகிறது


இதே கருத்துதான் சிலப்பதிகாரத்தின் முக்கியக் கருத்துமாகும்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொல்லும் சிலப்பதிகாரம்,
கோவலன் கொலயுண்டதற்கு முன் வினையே காரணம் 
என்று ஒரு கிளைக் கதையையும் சொல்கிறது.
சிலப்பதிகாரம் நெடுகிலும், 
இந்த ஊழ்வினைக் கருத்துதான் ஆங்காங்கே சொல்லப்படுகிறது.


திருவள்ளுவரும் ஊழ் என்னும் தலைப்பில் 
ஒரு அதிகாரமே அளித்துள்ளார். (அதி -38)
அதன் கடைசியில் முத்தாய்ப்பாக, 
’ஊழினும் வலிமை வாய்ந்தது எது உள்ளது? (எதுவுமில்லை)
அவ்வூழை நீக்க மற்றொரு வழியை ஆராய்ந்தால்
அங்கும் அவ்வூழே முன் நிற்கும்’ என்கிறார்.
இது 
விதியை மதியால் வெல்ல முடியும் – 
அதற்கு விதியும் இடம் கொடுத்தால்” 
என்னும் ஜோதிட அறிவாலும், அனுபவத்தாலும் வரும் அறிவு.



இதையெல்லாம் அறிந்தவன் ’அறிவன்; எனப்பட்டான்.
வள்ளுவர் என்பதே ஒரு ஜோதிடப் பரம்பரை ஆகும்.
எப்படி சுபாவத்தால் சொல்லப்பட்ட வர்ணம்,
பரம்பரையாகத் தொடர்ந்த்தோ, 
அப்படியே அறிவன் என்னும் சுபாவச் செயலும்,
பரம்பரையாக வரவேதான்
நாளடைவில் அறிவன் என்ற சொல் மறைந்துபோய்,
வள்ளுவர் என்ற குலம் என அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. 


வள்ளுவரும், 
கணியன் பூங்குன்றனாரும் காட்டும் ஊழ்வினைக் கருத்துக்கள், 
அவர்களுக்கும் முன்னால், 
பல காலம் இருந்து வந்திருக்கிறது.
அவர்களுக்கு முற்பட்ட காலத்திலிருந்த 
நூல்களிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது என்று 
யாதும் ஊரே பாடலில் கணியன் பூங்குன்றனார் கூறுகிறார்.


யாதும் ஊரேயாவரும் கேளிர்;தீதும் நன்றும் பிறர்தர வாரா;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;சாதலும் புதுவது அன்றேவாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமேமுனிவின்,இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே." (புற நானூறு – 192)


டா. உ.வே. சா. அவர்களால் கண்டெடுக்கப்பட்ட 
பழைய உரையில் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது :- 


எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தானே வரினல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றையொப்பத் தாமே வருவன; சாதலும் புதிதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிதென்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்தவிடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான் அமையாது கல்லை யலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை (மிதவை – தெப்பம்) போல அரியவுயிர் ஊழின் வழியே படுமென்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோமாகலான், நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம்மதித்தலினும் இலேம்.”

இதில் காட்டாற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டு வரும் தெப்பம் போல 
வாழ்க்கை இருக்கிறது. 
ஊழ் வினையால் அவ்வாறு நடக்கிறது.
ஊழின் வழியே உயிர்ப் படுமென்பது
நன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தோம்’ 
என்று சொல்லியுள்ளார்.
நன்மை எதுதீமை எது என்னும் கூறுபாடுகள் அறிந்தோர் 
எழுதிய நூல்களில் இருந்து தாம் கற்று அறிந்தோம் 
என்று பூங்குன்றனார் கூறுகிறார்.
இதனால் நூல்முகமாகவே ஊழ் வினைக் கருத்தும், 
அதன் அடிப்படையில் ஜோதிடக் கருத்தும் 
அவருக்கும் முன்னால் இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது. 
அது எந்தக் காலம் என்று தேடினால் 
நச்சினார்க்கினியர் உரையில் ஒரு கருத்து கிடைக்கிறது.


முதல் சங்கத்தில் வழங்கப் பட்டவை பற்றிச் சொல்ல வருகையில்
நச்சினார்க்கினியர் அவர்கள்,
முந்து நூல் அகத்தியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும்,
அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன :
எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல்,
அரசியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம், கூத்தும் பிரிவுமாம்”
என்று கூறுகையில் சோதிடத்தையும் குறிப்பிட்டுள்ளதால்,
ஜோதிடம் என்னும் சாஸ்திரம்,
முதல் சங்கம் ஆரம்பித்தபோதே,
 12,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது என்று தெரிகிறது.


இன்றைக்கு நமது திராவிடப் பகுத்தறிவுப் பகலவர்கள்
ஜோதிடத்தைப் பழித்தும், இழித்தும் கூறுவது மட்டுமல்லாமல்,
அது அறிவுக்கு ஒப்பானது அல்ல என்கிறார்களே,
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக
முக்காலத்தையும்
மூவகைப் பட்ட பிற நுணுக்கங்களையும்,
வாழையடி வாழையாக,
குரு- சிஷ்ய பரம்பரையாக,
உள்ளுணர்வு பலத்தாலும்,
ஊழ்வினை பற்றிய அறிவு கொடுக்கும் ஞானத்தாலும்,
தெய்வ பலத்தாலும்
அறிந்து வந்திருக்கிறார்களே
அப்படிப்பட்ட அறிவை,
அறிவன் தேறும் அறிவைப் பற்றிப்
பேசக்கூட இவர்களுக்கு அருகதை இல்லை..


அந்த அறிவர் சொல்லி வைத்த
வாழ்க்கையின் ஆரம்பமானாலும் சரி,
வருஷத்தின் ஆரம்பமானலும் சரி,
அது பிறர் திணிப்பால் வந்து விடுமா?

ஆதாரமேயில்லாத திராவிட ‘உணர்விலும்’
நாத்திகக் கொள்கையிலும் முழுகிய
500 பேர் சித்திரையில் ஆரம்பிக்கும் 
வருஷத்தை மாற்றினார்கள் என்கிறார்களே,
அவர்கள் அறிவர்களா?
அவர்கள் இந்த அறிவர்களுக்கு முன் நிற்க முடியுமா?

ஆனானப்பட்ட தொல்காப்பியத்தையே அதங்கோட்டாசான் ஆராய்ந்து,
குற்றம் குறை சொல்லி சரி பார்த்து
’அரில்தப’ அறிந்து ஒத்துக் கொண்டார் என்று
நச்சினார்கினியார் தொல்காப்பிய உரையில் கூறியுள்ளார்.
இந்த ஐந்நூறுவர் சொன்னது என்ன என்பதை
எந்த சபையில் ஆராய்ந்து
சீர்தூக்கினார்கள்?
இவர்களுக்கு அறிவன் சாஸ்திரமான ஜோதிடமும் தெரியாது,
அதில் நம்பிக்கையும் கிடையாது.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்துக்கு உட்பட்ட ஒரு விவரத்தை
இவர்கள் எப்படி முடிவு செய்யலாம்?


அறிவன் அறிந்த சாஸ்திரத்தை ஆரியத் திணிப்பு என்கிறார்கள்.
ஆனால் இந்த ஐந்நூறுவர் சொன்ன கருத்தை நம் மீது திணிக்கிறார்கள்.
இந்த்த் திணிப்பு மட்டும் நியாயமாகுமா?


இவர்கள் சொல்வது போல ஆரியன் திணிக்க முற்பட்டாலும்,
அதை அறிவர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பார்களா?
அதை அரில்தப உணர்ந்துதானே அறிவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
மேலும் ஆரியன் வந்த்தாக இவர்கள் சொல்லும் காலத்துக்குப்
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே
அறிவன் வகையினர் இருந்திருக்கின்றனர்.


இந்த அறிவெல்லாம் இல்லாமல்,
வழிவழியாக வந்த அறிவன் சாஸ்திரத்தையும் இகழ்ந்து,  
ஊழ்வினை காட்டும் சமயக் கோட்பாட்டையும் ஒதுக்கி விட்டு
தங்கள் மனம் போல் அர்த்தம் கண்டுபிடிக்கும்
திராவிடவாதிகளைப் பார்க்கும் போது
ஊழ் அதிகாரத்தின் 3 ஆம் குறள் தான் நினைவுக்கு வருகிறது.
திருவள்ளுவர் இவர்களுக்காகத்தன் அதை எழுதியுள்ளார் போலிருக்கிறது.


’நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.”

நுட்பமான அறிவைத் தரும் பல நூல்களைக் கற்றவனாயினும்,
அவனிடம் உள்ள உணர்வுக்கு ஏற்பவே அறிவு பெருகும்
என்பது இதன் பொருள். 

திராவிட உணர்வு பொங்கும் இவர்களிடம்
ஊழ்வலியை நம்பும் தமிழன் உணர்வு பொங்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக