திங்கள், 27 பிப்ரவரி, 2017

கிருஷ்ணமூர்த்தி பத்ததி

கிருஷ்ணமூர்த்தி பத்ததி
நாளைக்கு மதியம் 2.12&க்கு நீங்கள் உங்கள் நண்பருடன் ஓட்டலுக்குப் போவீர்கள். இன்று இரவு 10.14&க்கு உங்கள் தந்தையிடம் கடன் வாங்கியவர் திருப்பிக் கொடுப்பார். உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆண் குழந்தைதான். உங்கள் மகன் போகும் இன்டர்வியூவில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்! இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கண்டிப்பாக குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும்& இதெல்லாம் ஜோதிடத்தின் மூலம் மிகத் துல்லியமாக சொல்லமுடியும் என்றால் நம்பமுடிகிறதா... நம்பித்தான் ஆகவேண்டும் கே.பி. சிஸ்டம்ஸ் என்றழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி பத்ததி மூலம் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார் கே.ஹரிஹரன் இவர் கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மகன். இந்த வாரம் ‘இவர்கள்’ பகுதிக்கு நாம் சந்திக்க இருப்பது இவரைத்தான்!
‘‘கே.பி. சிஸ்டம்ஸ் என்றால் என்ன?’’
‘‘ என் தந்தை கிருஷ்ணமூர்த்தி பிறந்தது தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே இருக்கும் கூத்தூர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் அவர் உருவாக்கிய வழிமுறையையும் சேர்த்துதான் கே.பி. சிஸ்டம்ஸ். அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் தண்ணீர் பகுப்பாய்வுப் பிரிவில் பணிபுரிந்தார்.’’


‘‘ எல்லோரும் ஜோதிடம் பார்ப்பதற்கு இதுதான் முறை என்றிருக்கும்போது அதிலிருந்து மாறுபட்டு செயல்பட அவரைத் தூண்டியது எது?’’
‘‘இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது ஒரே நாள் ஒரே நட்சத்திரம் என்றிருந்தாலும் அவர்களுடைய கல்வி, வேலை, செயல்பாடுகள் அனைத்தும் வேறு வேறாக ஏன் இருக்கவேண்டும் என நினைத்தார். பால்ய வயதிலேயே திருமணம் ஆனவர்களுக்கு ஏன் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் மிகத் தாமதமாக திருமணம் ஆனவர்களுக்கு நிறைய குழந்தைகள். எதனால் இது ஏற்படுகிறது என யோசிக்கத் துவங்கினார்.
 உதாரணமாக ஆற்காடு பிரதர்ஸ் என்றழைக்கப்படும் ராமசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார் இருவருமே இரட்டைப் பிறவிகள். ஆனால், ஒருவர் டாக்டராகவும் இன்னொருவர் மிகச் சிறந்த நிர்வாகியாகவும் செயல்பட்டனர். ஏன் இந்த மாற்றம்? இருவருடையதும் ஒரே மாதிரிதானே இருக்கவேண்டும் ஏன் வேறுபட்டு இருக்கவேண்டும் என நினைத்ததன் விளைவே புதிய ஆராய்ச்சியில் இறங்கி அவர் கண்டுபிடித்ததுதான் கே.பி.சிஸ்டம்ஸ். அதற்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிறைய ஜாதகங்களை வாங்கி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார்.’’

‘‘இதில் உள்ள ஒரு பெரிய சிறப்பு என்ன?’’
 ‘‘கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் சனி பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சந்திராஷ்டமம், ஏழரை சனி, கிரகங்களுக்குள் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் இவை எதுவும் கிடையாது.
செவ்வாய், சனி, சூரியன் இவை பாபக்கிரகங்கள், 6,8,12& பாப வீடுகள், பாப கிரகங்கள் பாப வீட்டில் இருந்தால் எல்லாம் கெடுதலாகத்தான் முடியும். கேது விருச்சிக ராசியில் 12&வது வீட்டில் இருந்தால் பொருள் பண இழப்பு என்றுதான் சொல்வார்கள். ஆனால் கே.பி. சிஸ்டத்தில் இவை எதுவும் கிடையாது.
கிரகம் நின்ற நட்சத்திரம், அதன் அதிபதி, உப நட்சத்திராதிபதி இவற்றோடு பிறந்த நேரத்தை மட்டும் வைத்துப் பலன் சொல்கிறோம்.  நீங்கள் சொல்லக்கூடிய தகவலகளை கணித அடிப்படையில் கணித்து விஞ்ஞான ரீதியாக அணுகி கிரக அமைப்புகளையும், லக்ன முதல் கணக்கிட்டு கோசார ரீதியாகவும் தெள்ளத் தெளிவாகவும் கே.பி. சிஸ்டம் மூலம் பலன் கூறுகிறோம்.’’


‘‘பிறந்த நேரம் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?’’
‘‘குழந்தை பிறந்து எப்போது அழுகிறதோ அப்போதுதான் குழந்தை பிறந்த நேரமாகக் கணக்கிடவேண்டும். நீங்கள் பிறந்த தேதியுடன் உங்கள் ஜாதகத்தையும் கொண்டு வந்தால், நாங்கள் பிறந்த நேரத்தைத் துல்லியமாகக் கணித்துவிடுவோம்.’’
 ‘‘நீங்கள் ஜோதிடப் பலன் சொல்லும் முறையைப் பற்றிக் கூறுங்களேன்?’’
கேள்வி கேட்பவர் ஊர், கேட்கும் நேரம், அவருடைய பிறந்த நேரம். ஒன்றிலிருந்து 249 நம்பர்களுக்குள் ஏதாவது ஒரு எண் இதைச் சொல்லிவிட்டால் போதும் பலனைச் சொல்லிவிடுகிறோம்.’’
‘‘எல்லாம் சரி... அது என்ன 249 நம்பர்?’’
 ‘‘நம்முடைய நட்சத்திரங்கள் 27. கிரகங்கள் 9 இரண்டையும் பெருக்கினால் 243 வரும். சூரியனுக்கு& கார்த்திகை, பூரட்டாதி, விசாகம். குருவுக்கு& புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் என ஆறு நட்சத்திரங்கள் உண்டு. இவற்றையும் சேர்த்தால் கிடைக்கக் கூடியது 249.’’
‘‘எந்தப் பிரச்னைகளுக்கு பலன் சொல்வீர்கள்?’’
‘‘எல்லாவற்றுக்குமே பலன் சொல்லமுடியும். பரீட்சையில் எத்தனை மார்க் கிடைக்கும்? கல்லூரியில் இடம் கிடைக்குமா... அதிலும் கவுன்சலிங் மூலமாகவா, அல்லது மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டிலா, குழந்தை பிறப்பது... அது ஆணா, பெண்ணா... வீடு வாங்கமுடியுமா அது தனி வீடா, ஹவுஸிங் போர்டா, அல்லது ஃப்ளாட்டா. பிஸினஸ் செய்தால் லாபம் கிடைக்குமா. என்ன வேலை கிடைக்கும். திருமணம் ஆகும் நேரம். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்குமா. பதவி உயர்வு, தொலைந்துபோன பொருட்கள், கார் வாங்கும்யோகம், நடத்தக்கூடிய நிறுவனம் நல்ல முறையில் முன்னேறுமா, என்னுடைய குழந்தைகளில் எந்தக் குழந்தை கடைசிவரை என்னை வைத்துக் காப்பாற்றும். பிஹெச்.டி. ஆய்வு பேப்பரை எப்போது சமர்ப்பிப்பேன். பயணத்தில் ஏதாவது விபத்தைச் சந்திப்பேனா, என்னுடைய பிஸினஸில் புது பார்ட்னர் கிடைப்பாரா. பணிமாற்றம், ஊர் மாற்றம், நெருங்கிய உறவுகளால் தொந்தரவு, கடனிலிருந்து வெளியேறும் நாள், நோய், மரணம், மரணம் எந்த ரூபத்தில் வரும் இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் துல்லியமாகப் பலன் கூறமுடியும்.’’

‘‘மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. உங்கள் தந்தை கூறிய பலன்களைப் பற்றி...?
‘‘ எங்கள் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு மலேஷிய அரசு, ‘கிங் ஆஃப் அஸ்ட்ராலஜி’ பட்டம் கொடுத்திருக்கிறது. ஒரு முறை சிங்கப்பூர் போய்விட்டு ஸ்ரீலங்காவுக்கு வந்திருந்தார். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அந்த பிரஸ் மீட்டில் நிருபர்கள் பலரும் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதில் ஒரு நிருபர், When you will Die? (நீங்கள் எப்போது மரணமடைவீர்கள்?) என்று கேட்டார். அந்தக் கேள்விக்கு ஒரு நிமிடத்துக்கும் குறைவான மணித்துளிகளை எடுத்துக்கொண்டு, The Next day of your Death (நீ செத்த மறுநாள் நான் இறந்துவிடுவேன்) எனப் பதில் கூறினார்.
அந்தக் கூட்டத்திலேயே, ‘நீங்கள் பயணம் செய்ய இருக்கும் அந்த விமானம் எத்தனை மணிக்கு சென்னை சேரும்?’ என்று கேட்டார்களாம். என் தந்தை சிறிதும் தாமதிக்காமல், ‘4.29&க்கு சென்னையை அடைந்துவிடும்’ என்றாராம். அவர் சொன்ன அந்த நேரத்தில்தான் அந்த விமானம் சென்னையை வந்தடைந்தது.
அதற்கப்புறம் எங்கள் தந்தை மரணமடைந்தது 1972 மார்ச் 30&ம்தேதி, இந்தச் செய்தி எல்லா நாளிதழ்களிலும் வெளியாயின. வெளிநாட்டிலும் பிரசுரமானது. இரண்டு நாட்கள் கழித்து எங்களுக்கு ஒரு இ&மெயில் வந்தது. எங்கள் தந்தையாரின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட நிருபரின் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் என் தந்தையைக் கேள்வி கேட்ட அந்த நிருபர், 1972 மார்ச் 29&ம் தேதி இலங்கையில் ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்பதுதான் அதில் சோகம். இதில் விசேஷம் என்னவென்றால் என் தந்தை தனக்கு மரணம் என்ன தேதி என்பதைக் கணித்ததோடு அந்த நிருபருக்கும் சேர்த்துக் கணித்ததுதான்!’’
‘‘ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. நீங்கள் எத்தனை வருடங்களாக பலன்கள் சொல்லி வருகிறீர்கள் அதுபற்றி...?’’
‘‘கடந்த 25 வருடங்களாக நான் கே.பி. சிஸ்டத்தின் மூலம் பலன் சொல்லி வருகிறேன். ஒரு முறை எங்கள் அலுவலகத்துக்கு மூன்று பெண்கள் கே.பி. சிஸ்டத்தைப் படிக்க வந்தார்கள். என்னிடம் எல்லாம் பேசிவிட்டு, ‘நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது?’ என்றனர்.
‘இப்போது மணி என்ன?’ என்று கேட்டேன். அவர்களும் 6.44 என்று சொல்ல... நீங்கள் இந்த காம்ப்ளெக்ஸை விட்டு 8.02&க்குத்தான் போவீர்கள் என்றேன்.
அவர்கள் சிரித்தார்கள். ‘என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க... இப்போது நாங்கள் இருப்பது முதல் தளத்தில் கீழே இறங்க 8 படிகள் அப்படியே மெதுவாகப் போனாலும் பத்து நிமிடத்தில் வெளியே போய்விடுவோமே!’ என்றனர். நான் தலையைத் தாழ்த்தி, மிகப்பொறுமையுடன், ‘என் குருஜி சொல்லிக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன். கணக்கு தப்பாது. இது மேஜிக் இல்லை. மேத்தமேட்டிக்ஸ்’ என்று பதில் சொல்லிவிட்டு என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அவர்கள் கீழிறங்கினார்கள். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் நாம் மூவரும் வெளியேறி அவர் கூறியது தவறு என உரைக்க வேண்டும் என விரும்பினார்கள். இன்னொருவர், ‘அதான் கீழே வந்து விட்டோமே, இங்கிருக்கும் ஃபுட் வேர்ல்டு ஷாப்புக்குள் இரண்டு பொருட்களை வாங்கிவிட்டு பிறகு போகலாம்’ என முடிவுசெய்து, மூன்று பேரும் சில பொருட்களை வாங்கிவிட்டு, திரும்பிப் பார்த்தால் பில் போடும் இடத்தில் பெரிய க்யூ. இவர்களுக்கு பொறுமையில்லை. ஆனால் வரிசை மெதுவாகவே நகர்ந்தது. இவர்களுக்கு பில் போட்டு முடிக்கும் போது மணி 7.20. வெளியே போகும் வழியில் சிறிது கூட்டம் அதில் நீந்தி கார் பார்க் செய்யப்பட்டிருக்கும் இடத்துக்கு வந்து தங்கள் காரைத்தேட... அதில் சில மணித்துளிகள் கரைந்தன. அங்கிருந்த காவலாளி இந்த மூவரையும் பார்த்து, ‘ஏம்மா! நீங்க காரை நிறுத்துனது ஏ பிளாக், ஆனா இப்ப தேடுறது சி பிளாக் போய் உங்க கார் அங்க நிக்குது’ என வழிகாட்ட... பதற்றத்துடன் காரை எடுத்து வெளியே கிளப்ப, மணி 7.55. முன்னே இரண்டு கார் போக வழி கிடைக்காமல் நிற்க... மெதுவாக காரை எடுத்து ஸ்பென்சர் காம்ப்ளெக்ஸை விட்டு இவர்கள் கார் வெளியே வரும்போது மணி சரியாக 8.02. சந்தோஷமான மகிழ்ச்சியுடன் மறுநாள் என்னிடம் இதைப் பகிர்ந்து கொண்டார்கள்.

என் மகன் சென்னையில் இன்ஜினீயரிங் படித்துவந்தான். ஒரு முறை அவன் எழுதிய பேப்பரில் அவன் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை. என்னிடம் கூறினான். அவன் கூறிய நேரம், ஊரின் அச்சாம்சம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, ‘நீ எழுதிய பரீட்சை பேப்பரில் ஒரு பக்கம் திருத்தாமலேயே விட்டுவிட்டார்கள். வேண்டுமானால் அதற்கு மட்டும் தொகையைச் செலுத்தி பார்க்கலாம்’ என்றேன்.
மறுநாள் அவன் படித்த துறையின் பேராசிரியர், இவனுடைய ஆசிரியர் மற்ற துறை ஆசிரியர்கள் குழுமியிருக்க... பேப்பர் கொண்டுவரப்பட்டது. அந்த பேப்பரை துறையின் தலைமை பொறுப்பு அதிகாரி வாங்கிப்பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். நான் கூறியபடியே என் மகனின் விடைத்தாளில் கடைசிப் பக்கம் திருத்தப்படவே இல்லை. அத்தனை ஆசிரியர்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.
இவ்வளவு ஏன்? சென்னையிலிருந்து கிரான்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. டெல்லியிலிருந்தும் அதே மாதிரி ஜி.டி. எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இரண்டும் 18 மணி நேர பயணத்துக்குப் பிறகு சந்திக்கும் இடம் நாக்பூர். ஆனால் நீங்கள் கேட்கும்போது வண்டி புறப்பட்ட நேரத்தை வைத்துக் கணக்கிட்டால் எத்தனை மணி, விநாடி சுத்தமாக இது அந்த வண்டியை சந்திக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துவிடலாம்.’’

‘‘தொலைந்து போன பொருட்களைக் கண்டுபிடித்துச் சொல்வீர்களா?’’
‘‘நிறைய தடவை சொல்லியிருக்கிறேன். ஒரு முறை சிவகங்கையிலிருந்து ஒரு பெண்மணி எங்களுக்கு போன் செய்தார். அவருடைய பதினெட்டு வயது மகன் காணாமல் போய்விட்டான் என்று! நான் அவர்கள் என்னிடம் பேசிய நேரம், பையனின் பிறந்த நேரம் ஊரின் அச்சாம்சம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, உங்கள் மகன் கடற்கரை ஓரம் உள்ள ஓர் ஊரில் இருக்கிறான் என்றேன். அதற்கு அவர் சிவகங்கையில் கடற்கரையே இல்லையே எங்கு போய்த் தேடுவது என்றார். எனக்குள் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த, நீலாங்கரையில் போய்த் தேடுங்கள் என்றேன். என்ன ஆச்சர்யம் நான் கூறியபடியே அவர் மகன் அங்கிருந்தான்.
காரைக்குடியிலிருந்து ஒரு முறை போன். எங்களுடைய பீரோ சாவிக் கொத்தை எங்கே வைத்தோமென்று தெரியவில்லை. தயவுசெய்து கண்டுபிடித்துத் தாருங்கள் என்றார். காரைக்குடியில் நகரத்தார் வீடு ஒவ்வொன்றும் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமில்லையா... மிகக் குறைந்த கால அவகாசத்தில் தண்ணீர் அண்டா வைத்திருக்கும் பாத்திரத்துக்கு பக்கத்தில் இருக்கும் என்றேன். மிகுந்த சந்தோஷத்தில் நன்றி கூறினார்கள். ஏனென்றால் அந்த சாவியைத் திறந்துதான் பல லட்ச ரூபாய் பணத்தை அன்று அவர்கள் வங்கியில் செலுத்த வேண்டுமாம். பின்னர் அவரே எங்களுடைய கே.பி. சிஸ்டத்துக்கு மாணவராகவும் ஆனார்.
கொல்கத்தாவில் ஜோதிடர் மாநாடு நடந்தது. நானும் அதில் பங்கேற்றேன். இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல ஜோதிடர்கள் கலந்து கொண்ட மாநாடு. அந்த மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர் ‘நிலவு ஜெயலட்சுமி’ மேடையில் அவர் நிற்கிறார். நிகழ்ச்சியின் பாதியில் அவருடைய வலது காதில் இருந்த தோட்டைக் காணவில்லை. அவருடைய நெருங்கிய உறவினர் என்னிடம் ஓடி வந்து, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்பு தோடு இருந்தது. இப்போது காணவில்லை’ என பதற்றத்துடன் கூறினார். ‘அது கிடைக்குமா... கிடைக்குமென்றால் எத்தனை மணிக்குக் கிடைக்குமென்றார்’. அங்கேயே கணக்குப் போட்டு பார்த்து, ‘தோடு கிடைத்துவிடும் அதுவும் இரவு 7.48&க்கு கிடைக்கும்’ என்றேன். தோடு கிடைக்கும் என்றாலும் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில், சிலர் வெளிநாட்டில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களை எழுந்திருக்கச் சொல்லவும் முடியாது. சரி, ‘நான்தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டேனே கண்டிப்பாக கிடைத்துவிடும்’ என உறுதியாக நம்பினார்கள். நான் சொன்ன நேரம் நெருங்க நெருங்க... என்னிடம் பலன் கேட்டவர்களுக்கு பல்ஸ் எகிறியது. சரியாக 7.48&க்கு மேடையில் இருந்த திரைச் சீலையை வேறுகாரணத்துக்காக தூக்க... அந்த மடிப்பில் இருந்து தோடு விழுந்தது.
 ஒரு முறை மியூஸிக் அகாடமியில் ஜோதிடர் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் ஜோதிடர் பார்த்தசாரதி மற்றும் அவருடைய மனைவி ஹேமா பார்த்தசாரதி கலந்து கொண்டார்கள். உண்மையான நேரப்படி இரவு 7.30 மணிக்கு கருத்தரங்கம் முடியவேண்டும். நான் வெளிநாடு போகவேண்டிய கட்டாயம் இருந்ததால் எனக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டிய அவசரம். என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னிடம் விளையாட்டாக, ‘சார் 7.00 மணிக்குள் பார்த்தசாரதி முடித்துவிடுவாரா?’ என்றார். அவர் இந்தக் கேள்வி கேட்டதால், அதைவைத்து கணக்கிட்டு ‘சார் மன்னிக்கவேண்டும். நான் விமானத்தைப் பிடிக்கப் போகிறேன். ஆனால் இந்த மீட்டிங் முடிய இரவு 9.10&க்கு தான் முடியும். நீங்கள் இன்று சாப்பிடப்போவது 9.15&க்குதான்.’ சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். நான் விமான நிலையத்தில் காத்திருக்கும்போது அந்த நண்பர் கூறியது& அவர் சாப்பிட்ட நேரம் இரவு 9.15&க்குதான்.’’

‘‘உங்களிடம் பலர் படிக்கின்றனர். இதைப் படிக்க என்ன தகுதி வேண்டும். அவர்களும் உங்களைப் போல் துல்லியமாகப் பலன் சொல்வார்களா?’’
‘‘இந்த கே.பி. சிஸ்டத்தைப் படிக்க 36 மணி நேரம் படிக்க வேண்டும். சாதாரண கணக்கு போடும் அறிவு இருக்க வேண்டும். இன்ஜினீயர்களாக இருந்தால் ஒரு வாரம் போதும். இங்கு படித்து முடித்து இதே சென்னையில் மாதம் 30,000 ரூபாய்க்கு மேல் ஜோதிடப் பலன் சொல்பவர்கள் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு,
குற்றாலிங்கம் என்பவர் இங்கு படித்தவர். அவர் பார்த்த முதல் வேலை. கட்டடம் கட்டும்போது சென்டரிங் போடுவதற்கு கம்பி கட்டும் வேலைதான்! அவர் இங்கு படித்து முடித்துவிட்டு. இன்று என்னை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்து காலை 6 மணிக்கே கணக்கு போட்டிருக்கிறார். அதாவது காலை 11.12&க்குத்தான் அவர் என்னை சந்திக்க முடியும் என சீட்டு எழுதி பாக்கெட்டில் வைத்துவிட்டு வந்திருக்கிறார். அன்றைய தினம் 10.30 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டேன். வெளியே நிறைய இடங்களுக்குப் போய்விட்டு அண்ணசாலையில் எல்.ஐ.சி. அருகே டிராஃபிக் சிக்னலில் என் கார் சரியாக நின்றுவிட்டது. சாலையின் அருகே ‘குருஜி’ என ஒருவர் கூப்பிட... திரும்பிப் பார்த்தால் குற்றாலிங்கம். பாக்கெட்டில் இருந்து சீட்டை எடுத்துக் காட்டுகிறார். வாட்ச்சில் மணி பார்த்தேன். சரியாக 11.12.
இன்னொரு மாணவர் இங்கு படித்தவர் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் இவர் வகுப்பில் வந்த மேடம் போர்டில் பாடங்களை எழுதுஇக்கொண்டிருக்க... திடீரென இவர் எழுந்து, மேடம் எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பாடத்தில் 27&வது லைனில் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். என்று சொல்லியிருக்கிறார்.
மேடத்துக்கு பயங்கரமாக கோபம். எவ்வளவு தைரியம் இருந்தால் நான் எழுதிவைத்திருப்பதில் தவறு இருக்கு என்று சொல்வாய் என்று கடிந்திருக்கிறார். டிபார்ட்மென்டுக்கு வரச்சொல்லிவிட்டார். அங்கு மற்ற துறைகளைச் சேர்ந்த பேராசிரியைகளும், பேராசிரியர்களும் சேர்ந்துவிட. இவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள். இவரும் தைரியமாக போயிருக்கிறார்.
எல்லோரும் கேட்க, அவர் சிறிதும் சளைக்காமல், மேடம் நீங்கள் வைத்திருக்கும் நோட்டில் மொத்தம் 33 கோடுகள் இருக்கின்றன. அதில் 27&வது லைனில் நீங்கள் எழுதியிருக்கும் பாடத்தில்தான் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். எனச் சொல்லிவிட... அனைவரும் அந்த கோடில் எழுதியதைப் படித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஷாக்! அந்த மேடம் தவறாகத்தான் எழுதியிருந்தார்கள். அங்கிருந்த அத்தனை பேராசிரியர்களும் கட்டித் தழுவி கேட்டிருக்கிறார்கள். இவரும் கிருஷ்ணமூர்த்தி பத்ததியில்தான் படித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
ஆகவே படித்தவர்,படிக்காதவர் அனைவரும் இங்கு சமம். எல்லோரும் என்னைப்போலவேதான் தயார்படுத்தியிருக்கிறேன். அதுதான் எனக்குப் பெருமையும் கூட.’’

‘‘ உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபம் என்ன?’’
‘‘எங்கள் தந்தைக்கு ஸ்ரீகாஞ்சிப் பெரியவா ஆசிர்வதித்துக் கொடுக்கப்பட்ட உச்சிஷ்ட மஹா கணபதி விக்கிரகம் ஒன்று உள்ளது. அவருடைய 100&வது ஜயந்தி ஆகம சில்ப சதஸ் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அங்கு பெரிய பெரிய ஜோதிட ஜாம்பவான்களும் பெரிய பண்டிதர்களும் வந்திருந்தனர். ஆர்.வெங்கட்ராமன், எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லோரும் மேடைக்குக் கீழே அமர்ந்திருக்க, இந்த இடத்துக்கு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எத்தனை மணிக்கு வருவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பு எல்லொர் மனதிலும் எழுந்தது. ‘பால ஜோதிடம், நிருத வைத்தியம்’ என்று சொல்வார்கள். நான் உடனே கணித்து 7.58&க்கு இந்த பீடத்தில் வந்தமர்வார் என்றேன். அதே மாதிரி நடந்தது. ஸ்ரீஜேயேந்திரரும் எனக்கு பொன்னாடை போர்த்தி ஐந்நூறு சன்மானமும் கொடுத்தார்கள். இன்றுவரை அதை அப்படியே வைத்திருக்கிறேன்.
‘‘இந்த ஜோதிட முறை எங்கெங்கு பயிற்றுவிக்கப்படுகிறது?’’
‘‘தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூரு, மைசூர் வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலும் வகுப்புகள் நடைப்பெறுகின்றன. சாஸ்திரா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் அஸ்ட்ராலஜி பாடத்தில் கே.பி.சிஸ்டம்ஸ் ஒரு பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.’’        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக