வியாழன், 22 ஜனவரி, 2015

செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும்



பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. 

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. 

நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? 

அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்ப்போம். இப்போது செவ்வாய் தோஷத்தைப் பற்றி பார்ப்போம். ஒருவருக்கு திருமணப் பொருத்தத்திற்காக, ஜாதகம் பார்க்கும் பொழுது, செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 

ஏனென்றால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க செவ்வாய் மிக முக்கியமான காரணமாகிறது. ஜனன காலத்தை வைத்து, ஜாதகம் கணிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் லக்னம் என்பது விதியைக் குறிக்கிறது. மதியைக் குறிப்பது சந்திரன். 

மதிக்கும் அதாவது சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் மற்றும் குறிப்பிட்ட ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பை வைத்துத்தான், செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும் என்று சொல்லலாம். லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் இருக்குமிடத்திலிருந்து 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 7-ஆம் இடம், 8-ஆம் இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் ஏற்படும். 

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்திற்கு 2,4,7,8,12-இல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷ ஜாதகமாகும். இதில் ஒரு ஆண் ஜாதகருக்கு தோஷம் இருந்து, பெண் ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால் ஆணிற்கு அல்லது கணவனுக்கு இந்தத் திருமண பந்தத்தில் எவ்வித நலனும் இன்றி, முழுக்க கெடுபலனே நிகழும். 

அதே போல பெண்ணிற்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து, ஆணிற்கு தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால், பெண் அல்லது மனைவிக்கு திருமண உறவால் எவ்விதச் சிறப்பும் இல்லாமல், சீரழிவே ஏற்படும். இதில் ஓர் அறிவியல் உண்மையும் இருக்கிறது. 

செவ்வாய் - அங்காரகன் வெப்பமயமானவர். செவ்வாயை உஷ்ணக்கிரகம் என்றும் குறிப்பிடுவர். செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து, அவர்களின் இரத்தத்தையும் பரிசோதனை செய்து பார்த்ததில், ஏறத்தாழ 90-க்கும் அதிகமான சதவிகிதத்தினருக்கு `ஆர், ஹெச் நெகட்டிவ்'' வாக ரத்தமே இருந்தது தெரியவந்துள்ளது. 

இது அரிய வகை ரத்தம். இந்த வகை ரத்தம் அதே வகை ரத்தத்தோடு சேரும் போது தான் பாதிப்பு இருக்காது. மாறாக வேறு வகை ரத்தத்தோடு, திருமண பந்தம் இருந்தால், உடல் அளவில் ஏற்படும் பாதிப்பு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒவ்வாத ரத்தக் கலப்பு, தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதினால்தான், திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, செவ்வாய்க்கு முதல் மரியாதை கொடுக்கிறார்கள். இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், செவ்வாய் தோஷத்திற்கான விளக்கமும் எளிதாகப் புரிந்து விடும். மைனசும், மைனசும் பிளஸ் ஆவதைப் போல , செவ்வாய் தோஷ ஜாதகத்தோடு, செவ்வாய் தோஷ ஜாதகத்தை இணைத்தால், திருமண பந்தம் சிறக்கும் என நம் முன்னோர்கள் அறிவியல் அடிப்படையிலேயே ஜாதகத்தைக் கணித்திருக்கிறார்கள். 

செவ்வாய் தோஷத்தைப் போலவே, சுக்கிர, ராகு, சனி தோஷங்களையும், ஜாதக ரீதியில் ஒப்பிட்டுப் பார்த்தே, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். மேலெழுந்த வாரியாக 6 பொருத்தம், 8 பொருத்தம் என்று பார்த்து திருமணம் செய்துவிடக் கூடாது. 2,4,7,8,12-இல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பார்த்தோம். 

இதில் ஏகப்பட்ட விதிவிலக்குகளும் இருக்கின்றன. செவ்வாய் அமைவிடத்தை வைத்து மட்டுமே தோஷம் என்று கூறிவிட முடியாது. செவ்வாய் - மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் இருந்து, அவைகள் 4,7-ம் இடங்களால் சுபர் ஆனால் தோஷம் ஏற்படாது. காரணம் சம்பந்தப்பட்ட வீடுகளில், செவ்வாய் நீச்சம் பெற்றோ, உச்சம் பெற்றோ இருக்கும். 

செவ்வாய் சூரியனுடன் இருந்தாலும், சூரியனைப் பார்த்தாலும் தோஷம் கிடையாது. செவ்வாயோடு, சந்திரன் மட்டும் இருந்தாலும் தோஷமில்லை. குரு, புதனோடு சேர்ந்தாலும் தோஷம் கிடையாது. சனி, ராகு, கேது, இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், பார்க்கப்பட்டாலும் செவ்வாய் தோஷம் இல்லை. 

சிம்மம் அல்லது குடும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. இரண்டாமிடம் மிதுனம் அல்லது கன்னியாகி, அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. நான்காமிடம் மேஷம், விருச்சிகமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. 

ஏழாமிடத்தில் கடகம், மகரமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும், எட்டமிடத்தில் தனுசு, மீனமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. செவ்வாய் தோஷத்தைப்பற்றி ஒரு தப்பான கருத்து நிலவுகிறது. செவ்வாய் தோஷத்தால், பெற்றோருக்கு ஆகாது, மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்றெல்லாம் நம்புகிறார்கள். 

ஜோதிட ரீதியாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. செவ்வாய் 1,7,8 ஆகிய இடங்களில் இருக்கும் போது, அது கடுமையான தோஷமாகக் கருதப்படுகிறது. எனவே ஜாதகரீதியாக பொருத்தம் பார்க்கும் போது, அதே போல கடுமையான தோஷமுள்ள ஜாதகத்தை இணைத்தால் பாதிப்பில்லை. செவ்வாய் - 2,12-ஆம் இடங்களில் கடுமை குறைந்து காணப்படுவதால், குறைவான தோஷமே இருக்கும். 

இவற்றோடு தொடர்புடைய ஜாதகமாக இணைத்துப் பொருத்தம் பார்த்தால் நல்லது. 4-இல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 4,2,12-இல் செவ்வாய் உள்ளவர்களாகப் பார்த்து திருமண பந்தம் ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக