ஞாயிறு, 4 ஜனவரி, 2015

காரஹோ பாவ நாஸ்தியும் காதலைத் தூண்டும் ராகு,கேதுக்களும்!



ஜோதிட சாஸ்திரத்தில் ஜோதிடர்களுக்கு என்றென்றும் விவாதப் பொருளாகவும், விளங்காப் பொருளாகவும் இருப்பது நிழல் கிரகங்களான ராகு கேதுக்கள்தான்.

உண்மையில்,இவைகள் கிரகங்களே அல்ல. இவைகளுக்கு பருப்பொருளும், சக்தியும் கிடையாது.

சூரியப்பாதையும், விரிவு படுத்தப்பட்ட சந்திரப் பாதையும் சந்தித்துக் கொள்ளும் இரண்டு புள்ளிகளே ராகு,கேதுக்கள். 

உண்மையில் ராகு, கேதுக்கள் என்பது ஒரு நிழலாகிய இருட்டுக்கள்தான். சூரிய சந்திரர்களை மறைப்பதினால் மட்டுமே இவைகளை நம்மால் உணர முடியும்.


ராகு,கேதுக்களுக்கு 3,7,11 பார்வை உண்டு எனச் சிலர் கூறுகின்றனர்.

கிரகங்களின் பார்வை என்பதே அதன் ஒளிதான். ஒளியே இல்லாத,ஒளியைப் பிரதிபலிக்கவும் முடியாத நிழல்களுக்கு, அதாவது வெறும் இருளுக்கு பார்வை இருப்பது என்பது இயலாத ஒன்றாகத் தெரிகிறது. எனவே ராகு,கேதுக்களுக்கு பார்வை பலம் இல்லை என்பதே என் கருத்து.

ஆனால் ராகு,கேதுக்கள் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் வலம் வருபவை என்பதால் ஒன்று, மற்றொன்றின் ஏழாம் பாவத்தில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். அதனை ஏழாம் பார்வை என்பது பொருத்தமற்றது.

சந்திரனால் உருவாகும் நிழல் கிரகங்கள் இவை என்பதால் ராகு ரிஷபத்தில் நீசம் எனவும் விருச்சிகத்தில் உச்சம் எனவும் கொள்ளலாம். இயற்கைப் பாவக் கிரகங்கள் கெட வேண்டும் என்ற கருத்துப்படி ரிஷப ராகு எவரையும் கெடுத்தது இல்லை. ரிஷபராகு தசையில் ஓஹோவென வாழ்ந்தவர்களை அறிந்துள்ளேன்.விருச்சிக ராகு தசையில் கெடுபலன்களே அதிகம் நடக்கின்றன.

ஒரு ஜாதகருக்கு ராகு,கேது தசைகள் நன்மையைச் செய்யுமா என்று கணிப்பது பெரும்பாலான ஜோதிடர்களுக்கு ஒரு சவால்தான். அதிலும் அவை சுயசாரத்தில் இருந்து விட்டால் தலை சுற்ற ஆரம்பித்து விடும்.

ரிஷப, மிதுன, கன்னி, துலாம், மகர, கும்ப லக்னக்காரர்களுக்கு ராகு கெடுதல் செய்யும் நிலையில் இருந்தாலும் தீய பலன்களை பெரும்பாலும் செய்வதில்லை.அதேபோல் மேஷம், விருச்சிகம், தனுசு, மீனம் லக்னக்காரர்களுக்கு கேது தீயபலன் செய்வது இல்லை.

தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலத்தையும், தன்னைப் பார்க்கும், மற்றும் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் பலத்தையும் கவர்ந்து அவைகளின் நன்மை தீமைகளை தனது தசை, புக்திகளில் மிக வலுவாகச் செய்வன ராகு, கேதுக்கள். 

என்னைப் பொருத்தவரை சார பலம் கூட ராகு கேதுக்களுக்கு இரண்டாம் பட்சம் தான்.

மிதுன லக்னத்திற்கு ராகு யோகர் என்ற கருத்து பரவலாக உள்ளது.அனுபவத்திலும் அது சரியாகவே உள்ளது.

லக்ன பாவிகள் சம்பந்தம் பெறாதவரை ராகு,கேதுக்கள் எவரையும் கெடுப்பதில்லை. கடக சிம்ம லக்னத்தினருக்கு இவை 3,6,11 மிடங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அளிக்கின்றன.

முக்கியமாக,”காரஹோ பாவ நாஸ்தி” எனப்படும்,காரகன்,காரகவீட்டில் இருப்பது அதனை கெடுக்கும் என்பதை செயல்படுத்துவது ராகு,கேதுக்களே ஆகும். ராகு கேதுக்களின் மூலமாகவே இது பெரும்பாலும் நடைபெறுகிறது.

இந்த ஜாதகத்தினை கவனியுங்கள்.

சூரி
புத
சுக்

குரு
ராகு
சனி



செவ்
சந்
கேது


இந்த ஜாதகத்தில் சகோதரகாரகனாகிய செவ்வாய், இளைய சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் உள்ளார். மேலும் செவ்வாய் ஆறாமிடத்திலுள்ள கேதுவைப் பார்க்கிறார். அதாவது கேது தன்னைப் பார்க்கும் செவ்வாயின் பலத்தைப் பெறுகிறார்.

மேற்கண்ட ஜாதகர் தனது செவ்வாய் தசை, கேது புக்தியில் தான் மிகவும் நேசித்த இளைய சகோதரனை விபத்தில் இழந்தார்.கேதுவுக்கு எதிரே விரயத்தில் இருக்கும் ராகு சகோதரனை விரயம் செய்தார்.

எனது நீண்ட கால அனுபவப்படி எப்பொழுதுமே ராகு தசைக்கோ, புக்திக்கோ பலன் சொல்ல வேண்டுமெனில், கேதுவின் பார்வையிலும், கேதுவுக்கு பலன் சொல்ல வேண்டுமெனில் ராகுவின் பார்வையிலும் தான் பலம் சொல்ல வேண்டும்.

மேலும், ஒரு கிரகம் ராகுவின் சாரம் பெற்றிருந்தால், கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த ஸ்தான பலனும், அவரின் காரகத்துவம் எதுவோ அதுவே நடக்கும். கேதுவின் சாரம் பெற்றிருந்தால் ராகு எந்த ஸ்தானத்தில் இருக்கிறாரோ அதன் வழியே, அந்த ஸ்தானபலனும்.ராகுவின் காரகத்துவங்களுமே நடக்கும். ராகு கேதுக்கள் ஒரே நேர்கோடுகள் என்பதால் எதிரில் உள்ள ஸ்தானத்தின் நன்மை, தீமைகளையும் செய்யும்.

எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் நமது மூல நூல்களில், 3,11 மிட ராகு,கேதுக்கள் அபாரமான நன்மையை செய்யும், என்ற கருத்தின் உண்மையான அர்த்தமே, 3,11 மிடங்களில் ராகு,கேது இருந்தால் அந்த இடங்களுக்கு மறுமுனையான 5,9 எனும் திரிகோண ஸ்தானத்தில் அதன் இன்னொரு முனை கிரகம் இருக்கும் என்பது தான்.

உண்மையில் 3,11 மிடத்தில் இருக்கும் கிரகம் செய்யும் நன்மையை விட அதன் மறுமுனையான திரிகோண சுப வீட்டில் இருந்து சுபரான இன்னொரு ராகுவோ,கேதுவோதான் நன்மையைச் செய்கிறது என்பதே உண்மை.

பலன்கள் சொல்லப்படும் பொழுது பெரும்பாலும் ராகு,கேதுக்கள் ஒரே கிரகமாகவே கருதப்பட வேண்டும். மிக நுட்பமாகவே இவைகளை பிரித்தறிய வேண்டும்.

பெண்களின் ஜாதகத்தில் ராகு கேதுக்கள் எட்டாமிடம் சம்பந்தப்பட்டு, அல்லது அஷ்டமாதிபதி சம்பந்தப்பட்டிருந்து, அவர்களின் தசையோ புக்தியோ நடைபெறுமானால் அவர்களின் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தக்க பரிகாரங்களையும் உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஏனெனில், காதல் என்ற பெயரில் கயவர்களிடம் சிக்கி ஏமாந்து கற்பிழக்கச் செய்பவர்கள் ராகு கேதுக்கள். எட்டாமிடத்தில் ராகு கேதுக்கள் இருப்பதாலேயே ஒரு பெண் காதல்வயப்பட மாட்டார். ஆனால் அஷ்டமாதிபதியுடன் சேர்ந்து, சிக்கலான இடங்களில் இருந்தால் பெற்றோர்களுக்கு சிக்கல் தான்.

சில பெண்கள் தனக்கு முற்றிலும் தகுதியற்ற சிறிதும் பொருத்தம் இல்லாத நபர்களைத்தான் மணப்பேன் என்று பெற்றோரிடம் பிடிவாதம் பிடிப்பதும் அவர்களுடன் ஓடிப்போய் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த ராகு,கேதுக்களினால்தான்.

உதாரண ஜாதகத்தைப் பாருங்கள்.



புத
சுக்
குரு
சூ
செவ் ராகு




கேது
சனி


சந்
ராகு தசை ஆரம்பித்ததும் மேற்படி பெண்ணிற்கு காதல் அனுபவங்கள் ஏற்பட்டன. இஞ்சினியரிங் படித்த இந்த பெண் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரைத் திருமணம் செய்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். பனிரெண்டாமிடமான போகஸ்தானத்தில் இருக்கும் கேது இப்பெண்ணின் மனதை முழுமையாக ஆளுமை செய்கிறார்.

கண்களை மூடிக் கொண்டு இந்தப் பெண் கிணற்றில் விழுவதை யாரால் தடுக்க முடியும்?

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது பெண்ணிற்கும்,பையனுக்கும் ராகுதசை,புக்தி நடந்து கொண்டிருந்தாலோ, அல்லது பின்னால் இருவருக்கும் ராகுதசை சேர்ந்து வரும் என்றாலோ திருமணம் செய்யக் கூடாது.

ஒரு குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ராகுதசை அல்லது புக்தி நடந்தால் பிரச்சினைகள் உண்டாகும்.குழந்தைகளில் ஒருவருக்கும் அல்லது அனைத்து குழந்தைகளுக்கும் சேர்த்து குடும்பத்தில் அனைவருக்குமே ராகுதசை,புக்தி நடக்குமானால், தாய்,தந்தை பிரிவு, எல்லாவற்றிலும் தடை, துயரம், தரித்திரம், திருட்டு போதல்,மரணம் போன்ற துர்சம்பவங்கள் நடக்கும்.தகுந்த பரிகாரங்கள் செய்யவில்லை என்றால் சொல்ல முடியாத கஷ்டங்களை ராகு தருவார்.

ராகு,கேதுக்கள் சுப வலிமை பெறாமல் கெடுதல் தரும் நிலையில் இருக்கும் ஜாதகர்கள் ராகு,கேதுக்களின் விசேஷத்தலங்களான

ஸ்ரீகாளஹஸ்தி,திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், சீர்காழி டவுன்கோவில் போன்றவற்றிற்கு தங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று விசேஷ பரிகாரங்கள் செய்வது நல்லது. பாதிப்பிற்கு தக்கபடி, சிவன் கோவில்களில் ருத்ராபிஷேகம் செய்தும் செவ்வாய்க்கிழமை தோறும் ஸ்ரீதுர்கைக்கு நெய்தீபம் ஏற்றியும் (எலுமிச்சை தீபம் எப்போதுமே ஏற்றக்கூடாது.அது தோஷத்தை அதிகப்படுத்தும்)தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் கெடுதல் தரும் வலிமையைப் பெற்று விட்டால் அந்த ஜாதகரை கடவுள் அன்றி வேறு யாராலும் காப்பாற்ற இயலாது. அதே போல் ராகு,கேதுக்கள் மட்டுமே சுப வலிமை பெற்றிருந்து மற்ற கிரகங்கள் கெட்டிருந்தாலும், ராகு,கேதுக்களின் தசை வந்தவுடன் அனைத்து யோகங்களும் செயல்பட்டு அடிப்படை வசதிகள் பெறப்பட்டு பிறகு அந்த ஜாதகர் யோக வாழ்வே வாழ்வார். 

[ஜூலை 6-12,2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக