வெள்ளி, 16 ஜனவரி, 2015

பத்தாம் பாவமும்... அது சொல்லும் தொழில்களும்!



தஸம பாவன நதோ, கேந்த்ர, கோண தனஸ்தே, 


பாலவதி ஜனாயனம் ப்ரஸ்னராஜ விஸேஷ்தஹ!

(பத்தாம் பாவத்தின் அதிபதி, கேந்திரம், கோணம் அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தால், அந்த ஜாதகர் தொழில் விஷயத்தில் மிகுந்த புகழ் அடைவார்.)


ஒரு மனிதன் என்ன தொழில் செய்து பிழைப்பான் அல்லது அவனுக்கு ஏற்ற தொழில் என்ன என்பதை அவனுடைய ஜாதகத்தின் பத்தாம் பாவமும், பத்தாவது வீட்டு அதிபதியும் நிர்ணயிப்பதாக நம்முடைய வேதஜோதிடம் கூறுகிறது.

ஒரு மனிதனைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் ஜாதகத்தின்படி அலசி ஆராய, துல்லியமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்த நமது ரிஷிகள், அவனது தொழில் விஷயத்தைக் குறிக்கும் ஜீவன ஸ்தானத்தை மட்டும் விரிவாகக் குறிப்பிடாமல் சுருக்கமாகவே கூறிச் சென்றிருக்கின்றனர்.

மக்கள் தொகை குறைந்த, விஞ்ஞான வளர்ச்சியற்ற, நவீன கருவிகள் இல்லாத, குலத்தின் வழக்கப்படி தொழில்களைப் பிரித்துக் கொண்ட,விரல் விட்டு எண்ணக் கூடிய தொழில்களே இருந்த அந்தக் காலத்தில் அவர்கள் சுருக்கமாகக் கூறியது பொருத்தமானதே.

மிகப்பெரும்பாலான நம்முடைய கிரந்தங்கள் லக்னத்தின்படியோ, ராசியின்படியோ பத்தாம் பாவாதிபதி இருக்கும் நவாம்ச அதிபதியைப் பொறுத்து ஒரு மனிதனின் தொழில் அமையும் என்று சொல்லுகின்றன.

என்னைப் பொறுத்தவரை மேற்கண்ட கருத்து தற்போதைய பத்து சதவிகித ஜாதகங்களில் கூட பொருந்தி வரவில்லை.

ராஜயோகம் உடைய ஜாதகம் ஆயினும் அவனின் குலத்தைக் கணக்கில் கொண்டே அவனின் தொழிலைக் கூற வேண்டும் என இன்னொரு ஸ்லோகம் கூறுகிறது.


இதுவும் இக்காலத்திற்கு முற்றிலும் பொருந்தாது என எல்லோருக்கும் தெரியும்.

அன்று குருகுல வாசமாய், ஒரு குருவின் கீழ் இருந்து அவருக்குத் தெரிந்ததை மட்டும் கற்றுக் கொண்ட மாணவச் சமுதாயத்தின் இன்றைய நிலை என்ன?

எத்தனை விதமான படிப்புகள்? எத்தனை விதமான கல்வி முறைகள்? அதேபோல் வித விதமான வேலை வாய்ப்புகளும், சுய தொழில்களும் இன்று எண்ணிக்கைக்கு அடங்காது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜோதிடவிதிகளைப் படைத்த ஞானிகள் இன்றைய மாணவர்கள் ஐ.டித் துறையிலும், விஷுவல் கம்யூனிகேஷனிலும் புகுந்து விளையாடுவார்கள் என்பதை அறிந்திருக்க மாட்டார்களா என்ன?

கண்டிப்பாகக் கிடையாது. அனைத்தும் அறிந்தவர்கள் அவர்கள்.......

அதர்வண வேதத்திலேயே கலியுகத்தில் விளக்குகள் தலை கீழாய் ஒளிரும். ரதங்கள் தானே நகரும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே......

அன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தொழிலைப் பற்றிய ஜோதிட விதிகள் சுருக்கமாகப் போதும் என்றே ஞானிகள் கருதியிருக்கலாம்.

சரி.....

ஒரு மனிதனின் தொழில் அல்லது அவன் செய்யப் போகும் வேலையை துல்லியமாகத் தெரிந்து கொள்வது எப்படி?

லக்னமே இதில் முதலிடம் வகிக்கிறது.

ஒரு மனிதனின் எண்ணம், ஆற்றல், ஈடுபாடு, செயல்திறன் அனைத்தையும் லக்னத்தையும், லக்னாதிபதியையும் வைத்தே கணிக்க முடியும்.

அதன் பிறகு, பத்தாம் வீட்டின் அதிபதி, ஆறாம் வீட்டின் அதிபதி இருவரின் நிலையும் ஆராயப்பட வேண்டும்.

இந்த இரண்டையும் விட முக்கியமானது...

நடந்து கொண்டிருக்கும் அல்லது நடக்கப் போகும் தசை, புக்தி.

நமது கிரந்தங்கள் கூறுவது போல் பத்துக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்று, பத்தாமிடம் சுபர்பார்வை பெற்று வலுவாவது மிகச் சில ஜாதகங்களில் மட்டுமே.

பெரும்பாலோர் தொழில் சரியின்றி ஈடுபாடான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலைகளில் ஒட்டிக் கொண்டிருப் பவர்களே...

ஜாதகப்படி ஒருவருக்கு தொழில் எப்படி அமையும் அல்லது என்ன தொழில் செய்தால் ஒருவர் முன்னேறுவார் என்பதை இப்போது பார்ப்போம்.

 பத்தாம் வீட்டு அதிபதி 6 8 12 மிடங்களில் மறைந்து கெட்டு லக்னாதிபதி வலுவானால் நடைபெறும் தசைக்கேற்ப, தசைநாதன் காரகத்திற்கேற்ப தொழில் அமையும்.

(தசைமாறும் போது தொழில் மாறும். அதாவது ஒவ்வொரு தசைக்கும் ஒரு தொழில் அமையும். நிரந்தரத் தொழில் இருக்காது. இயற்கைச் சுபர் தசையானால் மதிப்புள்ள தொழில்களும், பாவர் தசையானால் அடாவடி தொழிலும், நீசர் தசையானால் நீசத் தொழிலும் (மது, தோல் போன்றவை)அமையும்.)

 பத்தாம் அதிபதி வலுவாகி, லக்னாதிபதி கெட்டால் அந்த ஜாதகர் தனித்து தொழில் செய்ய முடியாது. பிறரின் கீழ் வேலைதான் செய்ய முடியும். இந்த நிலையில் ஆறாம் வீட்டுக்கு அதிபதி, பத்தாம் வீட்டுடன், அல்லது பத்துக்குடையவனுடன் கொண்டுள்ள தொடர்பை வைத்து அவர் எப்படிப்பட்ட வேலையில் இருப்பார் என்று கணிக்க முடியும்.

 பத்துக்குடையவன் இரண்டாம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலோ, இரண்டாம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் வாக்கால் ஜீவிப்பார். அதாவது பேச்சு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பார்.

 (சம்பந்தப்பட்ட கிரகங்களின் காரகத்துவங்களுக்கு ஏற்ப ஆசிரியர், வக்கீல், தொலைபேசி ஆபரேட்டர் போன்ற தொழில் அமையும்.)

 ஜீவனாதிபதி கெட்டிருந்தாலும் லக்னாதிபதிக்கு நண்பரின் தசை நடந்து அவர் பத்தாம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருந்தால் தசாநாதனின் காரகத்துவத்தின்படி ஒரு தொழில் அமைந்து குறிப்பிட்ட தசை முடிந்தவுடன் அந்த தொழில் கைவிட்டு போகும்.

 பத்தாம் வீட்டு அதிபதி 6,8,12 வீடுகளில் மறைந்தோ, அல்லது வேறு வகைகளில் பலமிழந்தோ இருக்கும் நிலையில் லக்னாதிபதியும் வலுவிழந்தால் சொந்த தொழில் செய்வது கடினம். சில நிலைகளில் இப்படிப்பட்ட ஜாதகர் வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றித் திரிவார்.

 பத்தாம் வீட்டில் ராகு தனித்து இருப்பது சிறப்பான நிலை அல்ல. சுபருடைய பார்வையும் சேர்க்கையும் இல்லாத ராகுதசை, புக்தியில் தொழில் கெடும். நிரந்தரமான நல்ல வேலை அமைவது கடினம்.

 ஆறாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பது வேலை செய்வதற்கு ஏற்ற ஒரு நிலையாகும். அந்தக் கிரகம் பத்தாம் வீட்டில் வலுப்பெற்றால் அவர் தசையில் தலைமைப் பொறுப்பான வேலை கிடைக்கும்.

 ஜீவனாதிபதி வலுப்பெறாத நிலையில், நடைபெறும் தசைநாதன் லக்னத்தைப் பார்த்தாலும், அல்லது சம்பந்தமுற்றாலும் அந்த தசைநாதனின் காரகத்துவத் தொழில் அந்த திசையில் அமையும்.

 பத்தாமிடத்தில் நீசகிரகம் இருந்து, லக்னாதிபதி பத்தாமிட சம்பந்தம் பெற்றாலும், லக்னத்தில் நீச கிரகம் இருந்து பத்துக்கதிபதி சம்பந்தப்பட்டாலும் ஜாதகர் ஈடுபாட்டுடன் நீசத் தொழில் புரிவார். அல்லது நீச இடங்களில் ஈடுபாட்டுடன் வேலை செய்வார்.

 பத்துக்கு அதிபர் ராகுவுடன் சேர்வது சிறப்பான நிலை அல்ல. நிலையான தொழில் செய்ய முடியாது. ஆனால் ராகு தசையில் ராகுவின் காரகத்துவங்களின் படி தொழில் அமைந்து சிறப்பாக நடக்கும். (மற்ற கிரகங்களின் சம்பந்தங்களையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும்)

 பத்து, பனிரெண்டுக்குடையவர்கள் பரிவர்த்தனையானால் வெளிநாட்டு வேலை, அயல்நாட்டுத் தொடர்பு, வெளிதேசவாசம் உண்டு.

 குருவோ, சுக்கிரனோ 12 மிடத்தைப் பார்த்தால், அல்லது விரயத்தில் இருந்தால் வெளிநாட்டு குடிமகன் ஆவார்.(உண்மை என்னவெனில், குரு தசைக்கு முன் வரும் ராகு தசையும், சுக்கிரனுக்கு முன் வரும் கேதுவும் தான் வெளிநாட்டு தொடர்பை ஏற்படுத்தித் தருவார்கள்)

 ஆறாம் அதிபதி, பதினொன்றில் அமர்ந்து, லாபாதிபதி பத்தாமிடத்தில் லக்னாதிபதியுடன் அமர்ந்தால், ஆறாம் அதிபதி தசையில் சூதாட்டம் பங்குச் சந்தை போன்றவற்றில் பணம் கொட்டும்.

நிறைவாக...

பத்துக்குடையவன் கெட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள கிரகங்களின் வலுப் பெற்ற தசை நடந்தாலோ, அல்லது இவர்கள் லக்னாதிபதிகளாக ஆனாலோ கீழே சொல்லப் பட்டவைகள் நடக்கும்.

 சூரியன் - தந்தை வழி தொழிலும், அதிகாரமும், அரசு சம்பந்தப்பட்ட பணிகளும், அரசுத்துறையால் லாபமும், மருத்துவமும், சிறு அலுவலகமாயினும் தலைமைப் பொறுப்பும்.

 சந்திரன் - காய்கறி வியாபாரம், கலைகள் சம்பந்தப்பட்ட துறை, பால்வளம், கடல், வெண்மையான திரவங்கள், நீர் நிலைத் துறைகளும்,

 செவ்வாய் - யூனிபாரம் அணிந்து செய்யப்படும் வேலைகளும், எரிபொருள், நெருப்பு, அதிகாரம், விவசாயம், பூமி, கட்டிடம் இஞ்சினியரிங், மருத்துவத்துறை தொழில்களும்.

 புதன் - ஆடிட்டர், அக்கவுண்டண்ட், ஜோதிடம், புத்தகம், பிரஸ், விளம்பரம், தபால், எழுத்தாளர், வியாபாரம், தரகு, நடிப்பு, பேச்சு, வானவியல், ஓவியம், சிற்பம், கம்ப்யூட்டர், ஐ.டித்துறை போன்றவைகளும்.

 குரு வட்டித்தொழில், ஜுவல்லரி, வங்கி, நிதிநிர்வாகம், ஆசிரியர், தத்துவம், நீதிபதி, புரோகிதம், சாஸ்திரம், நவதானியம், ஆராய்ச்சி போன்ற தொழில்களும்.

 சுக்கிரன் - சினிமா, நடிப்பு, பாட்டு, பெண்களின் பொருட்கள், வெள்ளி, வாசனைப்பொருள், டெய்லர், வாகனம், கால்நடை, வெள்ளையான பொருள், ஓட்டல்,அழகுக் கலைகளும்.

 சனி - திரவமான நீசப் பொருட்கள், மது, பெட்ரோல், எண்ணை, டிம்பர்டிப்போ, தோல், இரும்பு, செங்கல், கட்டிடம்,ஆலைகள், மருத்துவமனை, துப்புரவு பணி, விமானம், லாரி கலப்பட வியாபாரம் போன்றவையும்.

 ராகு - புகைப்படம், டீசண்டாக ஏமாற்றுதல், மின்சாரம், சினிமா, சாதுர்யமான தொழில், ஜோதிடம், மாந்திரீகம், வெளிநாடு, திருட்டு, பணத்திற்காக வேலைமுடித்துத் தருதல், துப்பறிதல் போன்றவைகளும்.

 கேது மெடிக்கல் ஷாப், ஆன்மிகப் பொருட்கள் சப்ளை, மெழுகுவர்த்தி, எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர்ஸ்,பொதுமக்கள் பார்க்கும் மேடைத் தொழில், போக்குவரத்து, வெளிநாடு, விமானம் போன்றவைகளும். 

[ஆக 24-30, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக