ஞாயிறு, 4 மே, 2014

சித்திர ஆதிசங்கரர்-16


                                                        
முன்பு வாக்களித்த வண்ணம் அவளது உடளைத் தாமே தகனம் செய்ய முன் வந்தார் சங்கரர். இது துறவி செய்யத் தகாத செயல் என்று ஊராரும் உற்றாரும் பழித்து, இடித்துரைத்துச் சென்றுவிட்டனர். ஆயினும் சத்தியமும், அன்புமே எல்லா ஆசாரங்களுக்கும் மேம்பட்டது எனக் கருதிய சங்கரர் - தன்னந்தனியாக தாம் ஒருவரே அன்னையின் உடலத்தைத் தோட்டத்திற்குச் சுமந்து சென்று சிதையில் இட்டார். ஆசாரியப் பெருமான் ஆசார சீலர் மட்டுமல்ல. அவர் அன்பின் வடிவம். உண்மையின் வடிவம்
அன்னையின் இறுதிக்கடனை முடித்த பின்னர் தன் அவதாரக் கடனை பூர்த்தி செய்வதற்கு தேசம் முழுவதையும் காலால் நடந்து திக்விஜயம் செய்தார். சென்றவிடமெல்லாம் மற்ற கொள்கைக் காரர்களை வென்று வேதவழியான வைதீக மதத்திற்குத் திரும்பினார். பல ஆலயங்களில் தமது மந்திர சக்தியால் யந்திரங்களை ஸ்தாபித்து, அவற்றின் முலம் பராசக்தியின் அருள் உலகில் மேலும் வலுவாகப் பாய வகை செய்தார். சங்கரரைப்போல் உலக நலனுக்காகப் பல காரியம் சாதித்த இன்னொருவரை எண்ணிப்பார்க்கவும் இயலாது. நான்கு முறை அவர் பாரதத்தைச் சுற்றிவந்தாராம். இத்தனைக்கும் அவர் வாழ்ந்தது முப்பத்தி இரண்டே ஆண்டுகள்தாம். மக்கள் உயர்வு பெற வேண்டும் என்கிற மகத்தான கருணை ஒன்றே அவரை இப்படி ஓயாமல் செயலில் ஈடுபடுத்தி, அச்செயலுக்கு ஜெயமும் பெற்றுத்தந்தது.
இந்த திக் விஜயத்தில் அவர் ஒரு முறை கர்நாடக நாட்டில் உள்ள மூகாம்பிகை என்ற க்ஷேத்திரத்தை அடைந்தார். அங்கு வெகு உக்கிரமாகக் கோயில் கொண்டிருந்த அம்பிகையை சங்கரர் சாந்தப்படுத்தி அவளது உக்கிரகத்தை ஒரு ஸ்ரீ சக்கரத்துக்குள் அடக்கினார்.
இவ்வூரில் ஒரு அந்தணர் தமது ஊமைப் பிள்ளையுடன் சங்கரரை தரிசிக்க வந்தார். சங்கரர் அந்த ஊமைக் குழந்தையிடம் "c யார்?"என்று கேட்க அக் குழந்தை கணீரென்று பதில் கூறிற்று. "நான் இந்த உடல் அல்ல:எங்கும் பரவியுள்ள ஆத்மாவான ஒரே சத்யம்தான் நான்"என்று கூறியது குழந்தை. உள்ளங்கை நெல்லிக்கனியாக இவ்வுண்மையை அக்குழந்தை தெரிந்து கொண்டிருந்ததால் அதற்கு "ஹஸ்தாமலகர்"என்று பெயர் சூட்டினார் ஸ்ரீசங்கரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக