வியாழன், 8 மே, 2014

திருச்சிற்றம்பலம்


முன்னுரை :
தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செய்திகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன. சிலர் தமிழிலும், திருமுறைகளிலும் இல்லாததை இருப்பது போல் "தமிழ் நெறி", "திருமுறை நெறி" என்று சொல்லி, "சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல்" செய்து வருகின்றனர். அது கூடாதென்பதை, 5, 6, 7-02-2010-இல் தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, காசிமடம் வெளியிட்ட "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க!" என்ற நூலின் முன்னுரையின் முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தை 'உலகத்தார் உண்டு' என்று ஏற்பதையும் காட்டி உள்ளோம். 'எத்திறத்தானும் தேறார்' என்ற நிலையில் இதுதான் அது, அதுதான் இது என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். தெளிவுபெற விரும்புபவர்களுக்கு பயன்படும் என்று கருதி இது எழுதப்பெறுகிறது.

ஏத்தல் - வழிபாடாகுமா?

 ஏத்து - ஏத்து! என்னும் ஏவல் - துதி.
 ஏத்தல் - துதித்தல், வணங்குதல்.
 ஏத்துதல் - துதித்தல், வணங்குதல்.
    (வெள்ளி விழா - தமிழ்ப் பேரகராதி - 1, பக்.264)
இம்மூன்று சொற்கள் பூசை செய்தலைக் குறிக்காது. தோத்தரித்தல், அட்டாங்க, பஞ்சாங்க வணக்கங்கள், கைகூப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.
இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.
கோயில்களின் பூசனை என்பது வேறு. அதனை வேதாகம நெறிப்படி, சிவாசாரியர் செய்ய வேண்டும். வழிபட வரும் பக்தர்கள் அரன் சிந்தனையே கொண்டு பிற சிந்தனைகளை மறந்து திருமுறைகளைப் பாடுதல் - சொல்லுதல் வேண்டும்; அல்லது அரன் நாமங்களைச் சொல்லுதல் வேண்டும்.
சிவாசாரியர்கள் மட்டுமின்றித் துறவியரும் வேதாகம நெறிப்படி இறைவைப் பூசித்தற்கு உரியவரேயாவர்.
 "தென்னாடுடைய சிவனே போற்றி
 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
     - (திருவா. போற்றி.164, 165)
என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள - இறைமொழியில் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்ய வேண்டும். 'ஆகமம் ஆகி என்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்ற திருவாசகத் தொடரை உரக்க முழக்கம் செய்துவிட்டு அவ்வாகம விதிக்கெதிரான சதிசெய்பவர்களை என்னவென்று சொல்வது.
தமிழ் வேதங்கள் இருந்தன. அவை மறைந்தன. மறைந்தவற்றிலிருந்து தோன்றியவை வடமொழி வேதங்கள் என்றெல்லாம் எழுதப்பெறுவன கற்பனை வாதங்கள். பல நல்லறிஞர்களால் பலமுறை மறுக்கப்பட்ட பின்பும், மறுப்பைக் காணாமல் கேளாமல் மீண்டும் மீண்டும் சொன்னவற்றையே சொல்லுவது நன்றன்று. எந்தவொரு சமயமும் தன் மூல முதல் நூலை எந்த நிலையிலும் இழக்காது. எத்தகைய நிர்ப்பந்தத்தாலும் இழப்பை ஏற்படுத்த முடியாது. வேதமே மறைந்திருந்தால் - மொழி மாற்றப்பட்டிருந்தால் உலக வரலாற்றில் குறிக்கத்தக்க அவ்வளவு பெரிய அசாதாரண நிகழ்ச்சியைப் பின்னர் வந்த கவிஞர்கள் கதறிக் கதறிப் பதிவு செய்திருப்பார்களே!? நடக்காத கதையைச் சொல்லி நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்?
காலில் முள் குத்தினால் காலுக்கு மட்டும் துன்பம் என்பதில்லை. கண்களில் நீர் வரும்; ஒட்டுமொத்த உடம்பையுமே அசௌகரியப்படுத்திவிடும். திருமுறைகள் காட்டிய மறைவழியைத் திருமுறைகளைக் கொண்டே கிரியைகள் செய்து கொச்சைப்படுத்தும் செயல்களை, எங்கோ சிலர்தானே செய்கிறார்கள்; அதைப் பொருட்படுத்த வேண்டாமே எனச் சிலர் கருதக்கூடும். பேருருவுடைய நம் உயிர்ச் சைவ சமயத்தின் பேரால் செய்யப்படும் அந்த, மரபுப் பிறழ்ச்சி முள் குத்துவது போன்றது. சைவ சமயப் பேருருவில் அங்கங்களான சைவர்கள் அனைவரையுமே அத்தீச்செயல் அசௌகரியப்படுத்திவிடும். ஆகவே அந்த முட்களை தூக்கித் தூர எறிந்து, திருமுறைப் பெருமைகளை நாம் காத்தாக வேண்டும்.
'காத்தாள்பவர் காவல் இகந்தால்' சமயம் கறைபட்டுப்போகும். சைவத்திற்குக் காத்தாள்பவர் உள்ளனர். பதினெட்டு ஆதீனங்கள், சைவம் காக்கத் தோன்றியவை. அவ்வாதீனங்களில் சிலவற்றுக்குத் தக்க வாரிசுகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டல்காரர்கள் புறப்படுகின்றனர். இறைவனின் திருவருளால், பதினெண் ஆதீனங்களில் சிலபல ஆதீனகர்த்தர்களாகிய காத்தாள்பவர்கள், பிறர் பிறர் செய்யும் மரபுப் பிறழ்ச்சிகளை அனுமதிக்காமல் வேத நெறிச் சைவத்தைக் காத்தாளும் கடமையைச் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆசாரிய பீடங்களில் உள்ள அவர்களை மதியாமல் ஒதுக்கினால், தத்தம் பிழைகளைப் - பிழைப்புகளைக் கூச்சமின்றிச் செயற்படுத்தலாம் என்று மரபுப் பிறழ்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
திருமுறைகளைக் கும்பாபிஷேகக் கிரியைகளுக்கும், திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளுக்கும், திருமணம் முதலிய வாழ்வியல் கிரியைகட்கும் பயன்படுத்துபவர்கள் திர்முறைகளின் உயர் தரத்தைக் குறைப்பவர்களே ஆவர். அவர்களிடம் திருக்கோயில்களில் குடமுழுக்கு, இல்லறத்தில் திருமணம் போன்ற கிரியைகள் செய்ய வேண்டுமென்று விதிக்கும் விதிநூல் உண்டா? திருமுறைகளால் கிரியைகள் செய்வதற்கு, ஆட்சி உண்டா? ஆவணம் உண்டா? முன்னோர்களாகிய சான்றோர்களின் சாட்சி உண்டா? என்ற நம் வினாக்களுக்குப் பதிலில்லாமையால், சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்திறத்தாலும் திருந்தாதவர்களாக உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தோன்றிய வேத மறுப்புச் செய்திகள் மறுக்கப்பட்டவை. திருமுறைச் சடங்குகளுக்கு அவைகள் விடைகள் ஆகா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.
சமயம், சமயச் சடங்குகளில் நம்பிக்கை என்பதே சமயியின் முதல் தகுதி. வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டும்; அவ்வாறே தொன்றுதொட்டு நடந்தன. படைப்புக் காலம் தொட்டுச் சைவத்தின் கோட்பாடுகளும், நியதியும், நடைமுறையும் இவையே என்பதற்கான மிகப்பல ஆட்சிகள், ஆவணங்கள், சமயாசாரியர், சந்தானாச்சாரியர்கள், சமயச் சான்றோர்களின் திருவாக்குகள் ஆகியவற்றை காசிமடம் எழுதிய நூல்களில் தந்துள்ளார்கள். தொடர்ந்து நம் ஸ்ரீகுமரகுருபர திங்களிதழில் மெய்யுரை, வைதிகச் சைவம் ஆகிய தொடர்களில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றைக் கற்றுத் தெளிந்து மிகப் பலர், திருமுறைகள் போற்றும் நான்மறைச் சைவச் செந்நெறியில் பிடிப்புக்கொண்டுள்ளமை பரம்பொருளின் கருணையினாலேயே ஆகும்.
  "........................ - வீழ்த்த 
  புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி 
  நெறிநின்று ஒழுகுதிர் மன்ற 
  துறை அறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே"

என்றருளிய நம் ஆதி முன்னவராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் அறவுரை முழுமையாக வென்றே
நன்றி:சிவம்.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக